* ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தோல்வியின் எதிரொலி
எம்.ஏ.எம்.நிலாம்
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதையிட்டு தமது அதிருப்தியை வெளிக்காட்டும் விதத்தில் மூன்று பிரதான ஆசிரியர் சங்கங்களின் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் சுகவீன லீவுப் போராட்டத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சாதகமான முடிவெதுவும் கிட்டாததையடுத்தே இன்று முதல் சுகவீன லீவுப் போராட்டத்தை ஆரம்பிக்கும் முடிவை எடுத்ததாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத் தலைவர் யல்வெல பஞ்ஞாசேக்கர தேரோ தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம், கல்வி ஊழியர் சங்கம் என்பன கொழும்பில் நடத்திய விஷேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
நாட்டில் சுமார் 10 ஆயிரம் பாடசாலைகள் இருப்பதாகவும் இவற்றில் இரண்டு இலட்சம் ஆசிரியர்கள் பணி புரிவதாகவும் தெரிவித்த பஞ்ஞாசேகர தேரோ பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்கள் இந்த மூன்று சங்கங்களிலேயே அங்கத்துவம் வகிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறு நீண்டகாலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்ததாகத் தெரிவித்த தேரோ கல்வி அமைச்சு அதிகாரிகளும் அரசும் காலம் கடத்தும் போக்கையே தொடர்ந்து கடைப்பிடித்து வந்ததாகவும் கூறினார்.
இறுதியாக நாம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடிய போதிலும் ஜனாதிபதியிடமிருந்து எமக்கு சாதகமான பதிலெதுவும் கிடைக்காததன் காரணமாகவே ஆரம்ப கட்ட தொழிற்சங்க நடவடிக்கையாக சுகவீன லீவுப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்ததாக தெரிவித்தார்.
ஆசிரியர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இந்தப் போராட்டத்துக்கு சகல ஆசிரியர் சங்கங்களதும் கல்விசார் தொழிற்சங்கங்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இன்று முதல் ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான ஆசிரியர்கள் சுகவீன லீவு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது விடைத்தாள் பரிசீலிப்பதற்காக விண்ணப்பங்களை அனுப்புவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஆசிரியர்கள் சுகவீன லீவுப் போராட்டத்தை ஆரம்பிப்பார்களானால் பெரும்பான்மையான பாடசாலைகள் இயங்க முடியாத நெருக்கடி நிலை உருவாகலாமென தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கூடுதலாக உயர்தரப் பாடசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படலாமென்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி மூன்று ஆசிரியர் சங்கங்களும் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் சுகவீன லீவு தொழிற்சங்க நடவடிக்கைகளில் தமது சங்கங்கள் பங்கேற்கப் போவதில்லை என 10 ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கமும் சுயாதீன ஆசிரியர் சங்கமும் அகில இலங்கை அதிபர்கள் சங்கமும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கமும் இலங்கை தேசிய ஆசிரியர் சங்கமும் விவசாய, விஞ்ஞான டிப்ளோமா பட்டதாரி ஆசிரிய சங்கமும் சுயாதீன கல்விச் சேவையாளர் சங்கமும் ஆசிரிய ஊழியர் சங்கம் என்பன கூட்டாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அதன் இணைப்பாளரான ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
சம்பள முரண்பாட்டைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதை கண்டித்திருக்கும் இக் கூட்டு ஆசிரியர் சங்க அமைப்புகள் தாங்கள் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அடுத்தவாரம் முடிவெடுக்கப்படுமெனவும் அதற்கு முன்னர் கூடி ஆராயப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வி அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் நாட்டில் 32 ஆசிரியர் சங்கங்கள் காணப்படுவதாகவும் அதில் மூன்று சங்கங்கள் மட்டுமே தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கத் தீர்மானித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இத் தொழிற்சங்க நடவடிக்கைகளால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய மாவட்டக் கல்வித் திணைக்களங்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்தது.