மட்டக்களப்பு ஷ்ரீமங்கள ராமய விகாராதிபதி அம்பப்பிட்டிய சுமணரத்தின தேரர் நேற்று திங்கட்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
எல்லாவலமேதானந்த தேரர் தன்னை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று கூறி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமை மற்றும் அது தொடர்பான பிரசாரங்களை மேற்கொண்டுவருவதையும் ஆட்சேபித்தே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்றுக் காலை 6.30 மணி முதல் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் வீதியில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதத்தை அம்பிப்பிட்டிய சுமணரத்தின தேரர் ஆரம்பித்துள்ளார்.
எல்லாவலமேதானந்த தேரர் தனக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுக்களை வாபஸ்பெறக் கோரியும் கண்டித்தும் அறிக்கையினை வெளியிட்டுள்ளதுடன் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் இடத்தை சுற்றி தமிழ், சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள பதாதைகளையும் வைத்துள்ளார்.
அப்பதாதைகளில் குறிப்பிட்டுள்ளதாவது; எல்லாவல மேதானந்த தேரர் என்பவர் என்னைப் பயங்கரவாதி என குற்றஞ்சாட்டியதை நிரூபிக்கும் வரை உண்ணாவிரதம், எல்லாவல மேதானந்த தேரர் இனப்பிரச்சினையை தூண்டுவதை எதிர்த்து போராடுவோம், இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும், எல்லாவெல மேதனந்த தேரர் பௌத்த மதத்தை அவமதிக்கின்றார், எல்லாவெல மோதானந்த தேரர் என்னை பயங்கரவாதி என நிரூபிக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும்.
இதேவேளை, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தன்னை அரசியலில் பாவிக்க சிலர் முயற்சித்தபோது அதற்கு தான் இடம்கொடுக்க மறுத்தபோது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
எல்லாவல மேதானந்த தேரர் நான் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவன் என்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதுமட்டுமன்றி ரி.என்.எல். தொலைக்காட்சி மற்றும் பொதுஜன ஊடகங்கள் வாயிலாகவும் மக்கள் மனதில் திணிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
இதேவேளை, எனது அழைப்பின் பெயரில் வரும் மதகுருமாருக்கும் பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எல்லாவெல மேதானந்த தேரர் மட்டக்களப்பில் பௌத்தர்கள் இல்லையென்றும் மட்டக்களப்பு விகாரைக்கு ஒதுக்கப்படும் நிதியினை தடுப்பதாகவும் குறிப்பிட்டே உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
தான் புலி ஆதரவாளர் என வெளியிட்ட அறிக்கையினை வாபஸ் பெற வேண்டும். மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டின் படி நான் புலி ஆதரவாளரா இல்லையா என்பதை பாதுகாப்புத் தரப்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் வெளியிட வேண்டும். மட்டக்களப்பு விகாரைக்கு ஒதுக்கப்படும் நிதியை வழங்க வேண்டும். பௌத்தர் இல்லாத இடத்தில் விகாரை அபிவிருத்தி செய்ய தேவை இல்லை என வெளியிட்ட கூற்றை வாபஸ்பெற வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இதேவேளை, தேரர் உண்ணாவிரதம் இருந்த மேடையினை மறைத்து இடைஞ்சலாக பொலிஸார் பஸ் வண்டியினை நிறுத்தியதை ஆட்சேபித்து ஆத்திரமடைந்த தேரர் உடனடியாக பஸ்ஸை எடுக்காவிட்டால் தீவைக்கப்போவதாக கூறி தீப்பெட்டியுடன் தயாரான போதும் இதனை கிறிஸ்தவ மதகுருமார் தடுத்து சமாதானப்படுத்தினர்.
பொலிஸாரிடம் ஆயுதம் உள்ளது. என்னை சுடலாமே, ஏன் இப்படி இடையூறு விளைவிக்கின்றார்கள் என்று தேரர் கோஷமிட்டதையடுத்து அவருக்கு ஆதரவாக பெருந்திரளான பொதுமக்கள் அப்பகுதியில் கூடி நின்றதையும் காணக்கூடியதாகவிருந்தது.