* ராகமையில் சம்பவம்
விஷப் பாம்பொன்று கடித்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுமியொருவர் வைத்தியர்களின் அலட்சியப் போக்கினால் உயிரிழந்த சம்பவமொன்று ராகமை வைத்தியசாலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தமிழ் பெற்றோரின் 6 வயது மகளொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாம்பு கடித்ததும் குறித்த சிறுமி உடனடியாக மாலை 3 மணியளவில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிறுமியுடன் அவரை கடித்த பாம்பும் சாகடிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இருப்பினும், வைத்தியசாலை தரப்பு இரவு 8 மணி வரை எதுவும் செய்யாமல் அந்த சிறுமியை அப்படியே வைத்திருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் சிறுமியின் நிலைமை மோசமடையவே சிகிச்சையளிக்க முயற்சித்தும் அது பலனளிக்காமல் சிறுமி இரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இதேநேரம், தனது மகள் உயிரிழந்ததற்கு வைத்தியர்களே பொறுப்பு கூற வேண்டுமென சிறுமியின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சுமார் 5 மணித்தியாலங்களாக சிகிச்சை அளிக்கப்படாமலிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.