* புளொட் தலைவர் சித்தார்த்தன்
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஒற்றுமையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு களமாகவே இந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை எதிர் கொண்டுள்ளோம் என்று தமழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்)த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 10 ஆம் திகதி நடைபெறப் போகும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு நகரிலுள்ள புளொட் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;
" இதுவரை சிறுசிறு தேர்தல் வன்முறைகளே இடம்பெற்றுள்ளது. இத்தேர்தல் தெற்கில் இடம்பெற்று இருக்குமாயின் பாரிய வன்முறைகள் இடம்பெற்றிருக்கும்.
தேர்தல் தினத்தன்று அரசு எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதே எமது கேள்வி. தான் விரும்பும் பெறுபேற்றை அடைய முயற்சிக்குமா அல்லது அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சுதந்திரமான நியாயமான நீதியான தேர்தலாக நடைபெற இடமளிக்குமா? என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரசு ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களையும் தாம் கூட்டுச் சேர்ந்த கட்சியுடன் இணைந்து கைப்பற்ற வேண்டும் என்பதில் இலக்காக உள்ளது. இத் தேர்தலை வைத்தே அரசு தனது அடுத்த நகர்வினை மேற்கொள்ள விருக்கின்றது.
நான் மட்டக்களப்பிற்கு வந்து இதுவரை பொலிஸ் அதிகாரிகள் விஷேட அதிரடிப்படை அதிகாரிகளை சந்தித்து நியாயமான தேர்தலை நடத்த உதவுமாறு கோரியுள்ளேன். அவர்களும் அதனையே விரும்புகின்றனர்" என்றார்.
இத் தேர்தலில் தங்களது கட்சி எந்த இலக்கை அடையும் என எதிர்பார்க்கின்றீர்கள் என கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், புளொட், ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்பநாபா) ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து சுயேட்சையாக போட்டியிடுகின்றோம். 9 உள்ளூராட்சி சபைகளையும் வென்று விடுவோம் என்று கூற முடியாது. இருந்தாலும் பல இடங்களை கைப்பற்றுவோம்.
மக்களிடம் கூறி வருகின்றோம். இது வெறுமனே பிரதேச சபைத் தேர்தல் அல்ல வடக்கு, கிழக்கு மக்களது தலைவிதியை தீர்மானிக்கின்ற தேர்தலாகவேயுள்ளது.
அரசு 9 சபைகளையும் வெல்ல வேண்டும் என்பதில் இலக்காக உள்ளது. ஜனாதிபதி இத் தேர்தலை வைத்தே மீதி நகர்வை நகர்த்த இருக்கின்றார்.
அரசு எதிர்வரும் மே மாதம் கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்த இருக்கின்றது பிரதேச சபையில்
இணைத்துள்ள மூன்று கட்சிகள் மாத்திரமல்ல வேறு கட்சிகள் விரும்பினாலும் இணைத்துக் கொள்வோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இணைந்து போட்டியிடுவதற்கு தமிழீழ மக்கள விடுதலைப் புலிகளுடன் ஆரம்பத்தில் பேச்சு நடாத்தினோம் ஆரம்பத்தில் விருப்பம் தெரிவித்த அவர்கள் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துகொண்டனர்.
மட்டக்களப்பில் தற்போது ஆயுத நடமாட்டம் தற்போது குறைந்துள்ளது ஆயுதநடமாட்டம் இருந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் படை அதிகாரிகள் உத்தரவாதம் தந்துள்ளனர்.
தற்போது மக்கள் பரவலாக அச்சத்தில் உள்ளனர். மக்களது அச்சத்தை போக்கி அவர்களை வாக்களிக்க செய்ய மூன்று கட்சிகளும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அச்சத்துக்கு காரணம் ஆயுத நடமாட்டம். அதனை கட்டுப்படுத்த முடியுமான நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
பிரேமதாசா காலம் முதல் இன்றுவரை இடைக்கால நிருவாகத்தை அமைக்க கோரியுள்ளோம். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைக்கு தீர்வு காணவே முயற்சிக்கிறோம் டக்ளஸ் தேவானந்தாவும் மிகத் தெளிவாக மத்தியில் கூட்டாச்சி வடக்கு கிழக்கில் சுயாட்சி என்பதை வலியுறுத்தி வருகின்றார். கொள்கை ரீதியில் தெளிவாகவேயுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.