* தமிழ் சமூகம் தமக்கு அதிமுக்கியம் என்கிறார் பிரணாப் முகர்ஜி
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ தீர்வு ஒருபோதும் முடிவாக அமையாதென்றும் அந்த நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வெளிநாட்டு கொள்கையுடன் சம்பந்தப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்து பேசும் போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரான பிரணாப் முகர்ஜி மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
அவர் இலங்கை பற்றி இங்கு மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
இந்தியா இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அத்துடன், அண்மைக் காலமாக அதிகரித்திருக்கும் வன்முறைகள் மற்றும் மோதல்கள் குறித்தும் கவலை கொள்கிறது.
அத்துடன், இலங்கை பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வு கிடையாது என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது. தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளான பேச்சுக்கள் மூலமான அரசியல் தீர்வொன்றிலேயே முன்னோக்கிய பாதை தங்கியிருக்கிறது.
இலங்கையுடனான கொடுக்கல் வாங்கல்களின் போது இலங்கையிலுள்ள தமிழ் சமூகம் என்பது எமக்கு தனியான அதிமுக்கிய விடயமாகவே இருக்கிறது. நாம் எப்போதும் அவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துகிறோம்.
அத்துடன், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த போவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பதை இந்தியா முதற்படியாக வரவேற்றுள்ளது.
இதேநேரம், நாம் எமது மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்பதில் உணர்வுள்ளவர்களாக இருக்கிறோம். அதேவேளை, எமது மீனவர்கள், சர்வதேச கடற் பிரதேச எல்லைக் கோடுகளை மதிக்க வேண்டியதும் முக்கியம். இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.