புலிகள் இயக்கத்துக்காக நெடுங்காலமாக யுத்த ஆயுதங்கள், உபகரணங்கள், கருவிகளை வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாகக் கொள்முதல் செய்தும் கடத்தியும் வந்த சர்வதேச ஆயுதக்கடத்தல்காரரும், சட்டவிரோத ஆயுத வியாபாரியுமாகிய கே.பி.என அழைக்கப்படும் குமாரன் பத்மநாதனின் நெருங்கிய சகாவும் ஆயுதக் கடத்தலில் மேற்படி கே.பி.க்கு அடுத்த இரண்டாவது முக்கிய ஆயுத வியாபரியுமாகிய இளங்கோ எனப்படும் நபர் கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள `லொஜ்' விடுதியொன்றில் மேற்படி ஆயுதவர்த்தகர் பதுங்கியிருந்தபோதே விடுதியைச் சுற்றி வளைத்து அவரைப் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளிலிருந்தே அந்த நபரால் புலிகள் இயக்கத்துக்காக வெளிநாடுகளில் சட்ட விரோதமாகச் செய்யப்பட்ட ஆயுதக் கொள்முதல்கள், கடல்மார்க்கமாகச் செய்யப்பட்ட ஆயுதக் கடத்தல்கள் மற்றும் அவருடைய சட்டவிரோத வியாபாரங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதுபற்றி சட்டவிரோத வியாபாரியும் கடத்தல் காரருமான மேற்படி இளங்கோவிடமிருந்து மேலும் கிடைத்துள்ள தகவல்கள் பற்றி சம்பந்தப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் பத்திரிகைக்குக் கூறியுள்ள தகவலில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்த நபர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றும் அவர் பிரபாகரனுக்காக நெடுங்காலமாக ஆயுதங்களைச் சட்ட விரோதமாக வழங்கி வந்துள்ளார் என்றும் இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து கடல்மூலமாக ஆயுதக் கடத்தல்களைச் செய்வதற்காக குறிப்பிட்ட நாடுகளில் இவருக்குச் சொந்தமாக 5 கப்பல்கள் இருந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கப்பல் சொந்தக்காரரும் ஆயுதக் கடத்தல் வியாபாரியுமான இந்த நபர் மேற்படி புலிகள் இயக்கத்தின் சட்டவிரோத ஆயுதக் கொள்முதல்கள் கடத்தல்களுக்குப் பொறுப்பான சர்வதேச பிரதிநிதியாகிய கே.பி.யுடன் சேர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்தும் தனது கப்பல்கள் மூலம் கடத்திவந்து புலிகள் இயக்கத்துக்கு வழங்கியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளதாக குறித்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் புலிகளுக்காகக் கடல்மார்க்கமாகக் கே.பி. எனப்படும் பத்மநாதனும் இளங்கோவும் மேற்கொண்ட ஆயுதக்கடத்தல் ஏற்பாடுகளின் படி ஆயுதங்களைச் ஷ்ரீலங்காவுக்குக் கடத்திவந்த சில கப்பல்கள் ஷ்ரீலங்கா கடல் எல்லைப் பிராந்தியத்தில் வைத்து கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டன என்பது மேற்படி இளங்கோவிடம் மேற்கொண்ட புலனாய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த நபர் ஷ்ரீலங்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழராக இருந்தபோதும் இவர் சிங்கப்பூரிலேயே நெடுங்காலமாக வசித்து வந்துள்ளதுடன், சிங்கப்பூரில் இவருக்குச் சொந்தமாகச் சில வர்த்தக நிறுவனங்கள் உள்ளன என்பதும் விசாரணைகளிலிருந்து தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், சர்வதேச ஆயுத வர்த்தகரும் கடத்தல்காரருமாகிய இந்த நபர் புலிகள் இயக்கத் தலைவர் மற்றும் முன்னணி தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை உடையவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இவரிடமிருந்து சில முக்கிய புகைப்படங்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அவ்வாறு புலிகள் தலைவர் பிரபாகரன் முன்னாள் அரசியற் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் கடற்புலிகள் தலைவர் சூசை, புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டுஅம்மான் மற்றும் பிரதான தலைவர்களுடன் சேர்ந்து நின்று தனித்தனியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களும் அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் இவ்வாறு புலிகள் இயக்கத் தலைவர்களுடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் நேரடியாகச் சந்தித்துப் பேசக்கூடிய உயர்மட்ட தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
புலிகள் இயக்கத்தின் ஆயுத வர்த்தகராகிய இவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் குறித்த தங்கும் விடுதியைச் சுற்றிவளைத்த போது அவர் விடுதியில் ஒரு பகுதியில் ஒளிந்திருந்தார் எனவும் இவரைக்கைது செய்ததைத் தொடர்ந்து அவரைத் தடுத்துவைக்கும் உத்தரவின் பேரில் விசேட பொலிஸ் புலனாய்வுக் குழுவினர் அவரிடம் மேலதிக புலன் விசாரணைகளைச் செய்து வருகின்றனர்.
லங்காதீப : 27.02.2008