முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் பெங்களூர் ஓப்பன் டெனிஸ் போட்டி நேற்று தொடங்கியது.
கர்நாடக டெனிஸ் சங்கம் சார்பில் 2006 ஆம் ஆண்டு முதல் சர்வதேச பெண்கள் டெனிஸ் போட்டி பெங்களூரில் நடத்தப்பட்டு வருகிறது. 3 ஆவது முறையாக இந்த ஆண்டு நடைபெறும் இப்போட்டி தரம் உயர்வு (டையர் 2) பெற்றுள்ளது.
2.40 கோடி ரூபா பரிசுத்தொகைக்கான பெங்களூர் ஓப்பன் டெனிஸ் போட்டி நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. 9 ஆம் திகதிவரை இந்தப்போட்டி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் உலகத் தர வரிசையில் 7 ஆவது இடத்திலிருக்கும் செரீனா வில்லியம்ஸ், 8 ஆவது இடத்திலுள்ள வீனஸ் வில்லியம் (அமெரிக்கா), 15 ஆவது இடத்திலுள்ள பட்டி ஷிண்டர் (சுவிற்சர்லாந்து) 19 ஆவது இடத்திலுள்ள ஆக்னஸ் (ஹங்கேரி), 20 ஆவது இடத்திலுள்ள சிபில் பாமெர் (ஆஸ்திரியா), 22 ஆவது இடத்திலிருக்கும் வெரா சோனாரெவா (ரஷியா), 26 ஆவது இடத்திலுள்ள மரியா கிர்லெங்கோ (ரஷியா) உட்பட 32 வீராங்கனைகள் கலந்துகொண்டு மோதுகின்றார்கள்.
இதன் இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் கலந்துகொள்கின்றன. வீண் சர்ச்சைகளை தவிர்க்க இந்தியாவில் ஆடமாட்டேனென்று அறிவித்துள்ள சானியா மிர்சா இந்தப் போட்டியில் ஆடவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.