* டெண்டுல்கர் கூறுகிறார்
தனது 18 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் சிட்னியில் அடித்த `சதம்' மிகவும் மதிப்புமிக்கதென `மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
முக்கோணப் போட்டியின் முதல் இறுதியாட்டத்தில் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களை எடுத்தார். அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு நாள் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதம் இது. ஒரு நாள் போட்டிகளில் இது அவருக்கு 42 ஆவது சதமாகும். அவருடைய வலுவான ஆட்டத்தால் இந்தியா வெற்றிபெற்று 1-0 என்று முன்னிலை பெற்றது.
போட்டியின் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பின் அவர் கூறுகையில்;
"கடைசியாக நடைபெற்ற சில தொடர்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தேன். விளையாடும்போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட தொந்தரவால் சில போட்டிகளில் நிதானமிழந்தேன். ஆனால், இவையெல்லாம் விளையாட்டில் அடிக்கடி நடைபெறும் சம்பவங்கள் தான். இருப்பினும் சிட்னி போட்டியில் நான் தொடர்ந்து விளையாடி சதம் அடித்ததை மிக உயர்வாகக் கருதுகிறேன்.
திட்டமிட்டபடி நீண்டநேரம் நிலைத்து நின்று விளையாடியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெற்றது தான் சாதனை. சதம் அடித்தது இரண்டாம் பட்சம் தான்.
இந்தப் போட்டியில் எப்படியும் சதமடிக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு விளையாடினேன். சிட்னியில் இதற்கு முன் நாங்கள் அவுஸ்திரேலியாவை வென்றதில்லை. ஆனால், அதற்கெல்லாம் இந்தப் போட்டி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
இந்தப் போட்டியின்போது நான்காவது விக்கெட்டுக்கு என்னுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா 66 ஓட்டங்களை எடுத்தது போட்டியின் வெற்றிக்கு வழிவகுத்தது. அவர் நின்று பொறுமையாக ஆடினாலும் நெருக்கடியான நேரத்தில் சராசரி ஓட்ட வீதத்துக்கும் மேலாக எடுத்துள்ளார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது" என்றார் டெண்டுல்கர்.
ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடுவது இதுவே கடைசிப் போட்டித் தொடராக இருக்குமென்று டெண்டுல்கர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.