இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நேற்று முன்தினம் சிட்னியில் நடைபெற்ற முக்கோணத் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இறுதிப் போட்டியில் ஹர்பஜன் சிங் ரசிகர்களை நோக்கி குரங்கு போன்று சைகை காட்டியதாக `சிட்னி மோர்னிங் ஹெரால்ட்' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற போட்டியின் போது இந்திய ரசிகர்கள் அவுஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ சைமன்ஸை நோக்கி இரண்டு கைகளையும் உயர்த்தி குரங்கு போல் சைகை காட்டியதை போன்று, ஹர்பஜன் சிங் நேற்று முன்தினம் நடந்து கொண்டதாக அந்த நாளேடு தெரிவித்துள்ளது.
ஹர்பஜன் சிங், போட்டியின் போது தன்னை கேலி செய்த ரசிகர்களை பார்த்து காறி உமிழ்ந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதே சிட்னி மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது சைமன்ஸ் மீது இனவெறி தாக்குதல் நடத்தும் வகையில் ஹர்பஜன் சிங் நடந்து கொண்டதாக குற்றஞ் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹர்பஜன் சிங்கை விஷவித்து என்று விமர்சித்த அவுஸ்திரேலிய வீரர் மத்யூ ஹைடனை குற்றஞ்சாட்டிய நிலையில் ஹர்பஜன் சிங் இதுபோன்று நடந்து கொண்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனிடையே ஹர்பஜன் சிங் மீதான குற்றச்சாட்டுக்களை சர்வதேச கிரிக்கெட் சபை மறுத்துள்ளது. ஹர்பஜன் சிங் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரமில்லை என்றும், எனவே, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளது.
முன்னதாக அவுஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளியான ஹர்பஜன் சிங் மீதான புகாரை இந்திய கிரிக்கெட் அணியின் முகாமையாளர் விமல்சோனியும் மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.