உலக அளவில் போட்டி எழுந்திருக்கும் நிலையில், திறமையானவர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தொழில்நுட்ப திறன் கொண்டோரை பிரிட்டன் நிறுவனங்கள் நாடத் தொடங்கியிருக்கின்றன.
லண்டன் மற்றும் தென் கிழக்கு பிரிட்டனில் உள்ள உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட தொழில் ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத் திறன் படைத்தவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் கிழக்கு ஐரோப்பா மற்றும் இந்தியாவில் இருந்து ஊழியர்களை தேர்ந்தெடுக்க 10 நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
பிரிட்டனில் தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் வெளிநாடுகளை நோக்கி இந்நிறுவனங்கள் வருகின்றன.
ஓரளவுக்கு திறமையானவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்றுவிப்பதற்காகவே தனியாக முதலீடு செய்யவும் இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
`தொழில்நுட்ப பணிகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்வது மிகவும் சவாலான விடயம். அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது' என்கிறார் லண்டன் மற்றும் தென்கிழக்கு பிரிட்டன் பகுதியில் உள்ள நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவர் டேவிட் சீல்.