பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்பு ற மாகாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தர்ரா ஆதம் கெல் என்ற இடத்தில் நடைபெற்ற பழங்குடி இனத்தவர் சபைக் கூட்டத்திலேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டது. பலியானவர்களில் இருவர் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களாவர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துவது பற்றியும் தர்ரா ஆதம் கெல் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து விவாதிப்பதற்காகவும் இக் கூட்டம் நடைபெற்றது. இப்பகுதிகளில் தலிபான் ஆதரவு தீவிரவாதிகள் கடந்த சில மாதங்களாக தங்களது செயல்பாட்டை அதிகப்படுத்தி உள்ளனர். இது குறித்து விவாதிப்பதற்காவே சபை கூடியது.
இந்த நிலையில்தான் சபைக் கூட்டத்துக்குள் ஊடுருவிய தற்கொலைக்குண்டுதாரி கூட்டத்துக்குள் புகுந்து தன் உடலோடு வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் இராணுவம் அப் பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இத்தாக்குதலில் கடும் காயமடைந்தவர்கள் மாகாணத் தலைநகர் பெஷாவருக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
எந்தவொரு தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களையோ அல்லது வெளிநாட்டு போராளிகளையோ தங்கள் பகுதிக்குள் தங்க அனுமதிக்கப் போவதில்லை என்று அப் பகுதி பழங்குடியினத் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.
தீவிரவாதிக்கு உதவும் உள்ளூர் நபரின் வீடு தீ வைத்துக் கொளுத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் இதுபோன்ற தற்கொலைப்படை தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருவதாகத் தெரிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மின்கோரா என்ற நகரில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.