* பாராளுமன்றத்தில் கடும் சர்ச்சை
பாராளுமன்றத்தெரிவுக் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரே அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினர்களை நியமிக்க முடியுமென்ற அரசாங்கத்தின் அறிவிப்புக்கு ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ள அதேசமயம் அரச தரப்பின் இந்த வாதத்தை முற்றாக நிராகரிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்க நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர்தான் அரசியலமைப்பு பேரவையை உருவாக்க முடியுமென அரசாங்கம் கூறுமானால் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரேயே தேர்தல்களையும் நடத்த வேண்டுமென ஜே.வி.பி.எம்.பி. அநுரகுமார திசாநாயக்கா சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்தபின் அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினர்நியமனம் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.
இது தொடர்பாக எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா அறிக்கை யொன்றை விடுத்து உரையாற்றினார்.
அண்மைய காலங்களில் அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினரை நியமிக்காமை குறித்தும், அதனால் ஏற்படும் பாதகங்கள் பற்றியும் எதிர்க் கட்சிகள் இச்சபையில் சுட்டிக்காட்டி வருகின்றன.
மாயதுன்ன பாராளுமன்றத்தில் பணியாற்றுவதால் அவரை அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்க முடியாதென அரசாங்கம் அப்போது கூறியது. ஆனால் இப்போது தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு காத்திருப்பதாக கூறுகிறது.
அரசாங்கத்தின் இப்போலிக்காரணங்களை ஒருபோதுமே ஏற்க முடியாது. தமக்கு சாதகமான ஒருவரை நியமிக்க அரசாங்கம் முயலுவதாக ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
ஜே.வி.பி.எம்.பி.அநுரகுமார திசாநாயக்கா கருத்து தெரிவிக்கையில்;
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரே அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினரை நியமிக்க முடியுமென அரசாங்கம் கூறுவது வெட்கக்கேடான விடயமாகும். ஜனாதிபதி தாமதம் காட்டுவதை ஒருபோதுமேஏற்க முடியாது.
அரசாங்கம் விடாப்பிடியாக இருக்குமேயானால் தேர்தல் மறுசீரமைப்பை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைக்கும்வரையும் எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது.
எனவே ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் ஆளும் கட்சி அமைச்சர்கள் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். இதில் எத்தகைய விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லையென்றார்.
இதன்போது குறுக்கிட்ட ரணில் விக்கிரமசிங்க;
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை கிடைக்கும்வரை காத்திருக்கிறோமெனக் கூறி அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினரை நியமிப்பதற்கு ஜனாதிபதி காட்டும் தாமதத்திற்கான காரணத்தை அவருடனான சந்திப்பின்போது நாம் ஒருபோதுமே ஏற்கவில்லை. உறுப்பினரை நியமிப்பதன் மூலம் ஒருபோதுமே ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைந்துவிடப்போவதில்லை என்றார்.
அப்போது சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார கருத்து தெரிவிக்கையில். இவ்விவகாரம் மிகவும் முக்கியமானதெனவும், எனவே இதனை அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறவேண்டுமென்றார்.
இவ்வேளை குறக்கிட்ட ரவி கருணாநாயக்கா, எதிர்க்கட்சிகளுடைய கேள்விகளுக்கு எப்போதும் துள்ளிக்குதித்து விடையளிக்கும் அமைச்சர் ஜெயராஜ் மற்றும் நிமால் சிறிபால டீ சில்வா ஆகியோர் இவ்விவகாரத்தில் மௌனம் காப்பதாகவும், அவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இவ்வாறு சர்ச்சை நீடித்துச் செல்கையில் குறுக்கிட்ட சபாநாயகர் முன்னைய சபாநாயகர்கள் கடைப்பிடிக்காத ஒன்றை தாம் கடைப்பிடிப்பதாகவும் அதாவது அரசியலமைப்பு பேரவை விவகாரம் பற்றி சபை ஆராய்ந்த விடயங்களை தாம் ஜனாதிபதிக்கு விடய முக்கியத்துவம் கருதி அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து சர்ச்சை முடிவுக்கு வந்த அதேவேளை, இச்சர்ச்சைக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் தற்போது உள்ளதாகவும் அதை நடைமுறைப்படுத்த ஐ.தே.க.தனது ஆதரவை எப்போதும் நல்க தயாராகவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.