சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்குமிடையிலான நோயாளர் விமானப் போக்குவரத்துச் சேவையை கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
விசேட மருத்துவ சிகிச்சை தேவைப்படும் ஒன்பது நோயாளர்களும் அவர்களுடன் ஐந்து உதவியாளர்களும் இரு வைத்தியர்களும் இவ் விமான சேவை மூலம் கொழும்பு சென்றிருந்தனர்.
செப்டெம்பர் 2006 முதல் யாழ்.குடாநாட்டிலிருந்து விசேட சத்திர சிகிச்சை, மருத்துவ பரிசோதனைகள் அல்லது சிகிச்சைகள் பெற முடியாத நிலையில் இருந்த நோயாளர்கள், ஐ.சி.ஆர்.சி.யால் அமர்த்தப்பட்ட இவ் விமானசேவை மூலம் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டனர். தமது சேவைக்கென தலைநகரில் பயிற்சிகள் தேவைப்பட்ட மருத்துவப் பணியாளர்கள், ஆய்வுகூட மாதிரிகள் மற்றும் குளிர்ப்பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட வேண்டிய தடுப்பூசி மருந்துகள் போன்றவற்றின் கிரமமான போக்குவரத்துக்கு ஐ.சி.ஆர்.சி.யின் இவ் விமான சேவை மூலம் வசதியளிக்கப்பட்டது.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் நோயாளர்களினதும் அவசர மருந்து வகைகளினதும் கிரமமான விமான போக்குவரத்துக்கு ஐ.சி.ஆர்.சி. தொடர்ந்தும் உதவியளித்தது.
விமானசேவை சம்பந்தமான நடவடிக்கை மாற்றங்களுக்கு நாமும் எம்மைத் தயார் செய்துகொள்ளவும். அதேவேளை, பயணிகளின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான ஐ.சி.ஆர்.சி. யின் இவ் விமான சேவையை நாம் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருந்தது.
நோயாளர்கள் கடல், தரை, மார்க்கமாக 30 மணித்தியாலங்களுக்கு மேலாக பயணம் செய்து கொழும்பு வந்து தமது மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கடினமான ஒரு நிலைமை இருப்பதை அறிந்திருந்த நாம் மிக அழுத்தமான சூழ்நிலைகள் மத்தியிலும் முயற்சி எடுத்து மீண்டும் இச்சேவையை ஆரம்பித்துள்ளோம் என ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்புக்கான தலைமை பேராளர் லண்டன் கோவ் தெரிவித்தார்.
03.02.2008 முதல் வாரம் இரு தடவைகள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட சிறுரக விமானம் மூலம் (பீச் கிறாவ் B 1900 C ) ஐ.சி.ஆர்.சி.யின் இச் சேவை நடைபெறவுள்ளது. இவ் விமானத்தில் 15 பேர் பயணம் செய்யலாம்.
தடுப்பு மற்றும் அவசர மருந்து வகைகளை கடல் மார்க்கமாக கொண்டுவரின் அதற்கு ஒரு மாதமளவில் செல்லலாம். இவ்விடயத்தில் ஐ.சி.ஆர்.சி.யின் விமான சேவை பெறுமதி மிக்கதொன்று. இவ் விமானசேவை மூலம் எமது சுகாதார சேவைப் பணியாளர்கள் சுகாதார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்படும் பயிற்சிகளிலும் பங்குபற்றி தமது தொழில் ஆற்றலை விருத்தி செய்துகொள்ள இலகுவாகிறதென யாழ். சுகாதார சேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.