* மனோ கணேசன் கூறுகிறார்
அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பகுதிகளில் ஆட்கள் காணாமல்போவதற்கு அரசே காரணமெனவும் அதனை எந்த வகையிலும் எவராலும் மூடி மறைக்க முடியாதெனவும் மேலக மக்கள் முன்னணித் தலைவரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணாமல்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானோர் திரும்ப வந்துவிட்டதாகவும் மிகச் சிலர் பற்றியே விசாரணை நடைபெறுவதாகவும் தாங்கள் மேற்கொண்ட அனைத்து விசாரணைகளின் மூலம் ஆட்கடத்தல்களுக்கோ அல்லது ஆட்கள் காணாமல்போவதற்கோ படையினருக்கும் பொலிஸாருக்கும் எவ்வித தொடர்புமில்லையெனத் தெரியவந்துள்ளதாக ஆட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல்போனது தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் மகாநாம திலகரட்ன தலைமையிலான தனிநபர் ஆணைக்குழு நேற்று தெரிவித்துள்ளது.
இது குறித்து கூறுகையிலேயே மனோகணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்;
"மகாநாம திலகரட்னவின் கூற்று அப்பட்டமான பொய் உண்மைக்குப் புறம்பானதெனக் கருதுகிறேன்.
இதுவரை காலமும் அவர் எங்கிருந்தாரென்ற கேள்வி எழுவதுடன், அவரால் ஆராயப்பட்டு அரசுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை எங்கே என்றும் கேட்க விரும்புகின்றேன்.
அரசிற்கும் அவர் அறிக்கையொன்றை வழங்கியிருந்தாலும் அரசு அதனை முழுமையாக வெளியிடவில்லை. தமக்குத் தேவையானபோதெல்லாம் அரசும் அதில் அங்கம் வகிப்போரும் அதனை எடுத்துக்காட்டி பேசிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அந்த அறிக்கை மக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
காணாமல்போனதாகக் கூறப்படும் 700 பேரில் பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டதாக மகாநாம திலகரட்ன கூறுகிறார். ஆனால், அவ்வாறு வீடு திரும்பியோர் பற்றிய தகவல்களை நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றோம். ஆனால், இதுவரை அது எமக்குத் தரப்படவில்லை.
இந்த அறிக்கையை அரசு சமர்ப்பிக்குமென கூறப்பட்ட காலத்திலேயே, காணாமல்போனோரில் பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டதாகவும் பலர் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் கூறினார்கள்.
எனினும், காணாமல்போனோர் தொடர்பாக நாங்கள் தயாரித்த பூரண விபரமடங்கிய பெயர்ப்பட்டியலை நாம் அரசிடம் வழங்கியுள்ளோம். பாராளுமன்றத்தில் இந்தப் பட்டியலை நான் பிரதமரிடமும் வழங்கியுள்ளேன்.
இவர்களில் எவராவது வெளிநாட்டுக்குச் சென்றார்களா என்பதை அறிவதற்காக இந்தப் பட்டியலை குடிவரவு- குடியகல்வு ஆணையாளரிடம் கூட வழங்கியுள்ளேன். பொலிஸ் ஆணைக்குழுத் தலைவருக்கும் இதனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதேநேரம், இந்த ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல்போதல் மற்றும் கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் படையினருக்கோ அல்லது பொலிஸாருக்கோ எதுவித தொடர்பில்லையெனவும் அவர்களுக்கு இவற்றில் தொடர்பிருந்ததாக எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லையென மகாநாமதிலகரட்ன கூறியுள்ளது பற்றி கேட்டபோது;
இவற்றிலெல்லாம் எதுவித உண்மையுமில்லை. யாழ்.குடாநாட்டின் பெரும்பகுதி இராணுவக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. கொழும்பு தலைநகரம் படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனை அவர்கள் மறுப்பார்களா? ஏனென்றால், இந்தப் பகுதிகளிலிருந்து மிகப் பெரும்பாலானோர் கடத்தப்பட்டும், காணாமல் போயுமுள்ளனர்.
இந்தப் பிரதேசங்களில் மிகப் பெருமளவு படை முகாம்களும் வீதிச் சோதனை நிலையங்களும் வீதித் தடைகளும் உள்ளன. இந்த நிலையில், இந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாகவும் திட்டமிட்ட முறையிலும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போதல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு.
அரசின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களுக்கு அரசை பொறுப்புக் கூறாது வேறு எவரைப் பொறுப்புக் கூற முடியும்.
கடந்த சில வாரங்களில் கூட கொழும்பில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அந்தச் சம்பவங்களில் கடத்தப்பட்டோர், காணாமல் போனோரில் பலர் சி.ஐ.டி., ரி.ஐ.டி. எனக் கூறப்படும் பொலிஸ் நிலையங்களிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர், வெளியே வந்துள்ளனர்.
இதில் முக்கியமென்னவென்றால், கடத்தப்பட்ட, காணாமல் போன அனைவரும் வெள்ளை வான்களில் வந்த ஆயுதபாணிகளாலேயே கடத்தப்பட்டுள்ளனர்.
இதனால், சீருடை அணியாது வெள்ளை வான்களில் ஆயுதங்களுடன் வந்த பொலிஸாரே தமிழர்களைப் பயமுறுத்தி அவர்களைக் கடத்திச் சென்றது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது நிரூபிக்கப்பட்டுமுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது கடத்தல்காரர்கள் யாரென பொது மக்களால் கூறமுடியாது, கண்டு பிடிக்கவும் முடியாது.
கடத்தப்பட்டு அல்லது காணாமல் போனோரில் பலர் திரும்பி வந்து விட்டதாக மகாநாம திலகரட்ன கூறுவதில் உண்மையில்லை.
ஆனால், அவர் கூறும் சம்பவங்களில் பெரும்பாலான சம்பவங்கள், வழமையாக சமூகத்தில் நடைபெறுபவையாகும். அதாவது, வீட்டிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக காணாமல் போவோர் விடயத்தில் இது சரியாகவுள்ளது.
திருமணம், காதல் பிரச்சினை, சொந்தப் பிரச்சினை காரணமாக தினமும் பலர் காணாமல் போகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் இந்த நாட்டில் சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பல்வேறு நாடுகளிலும் இவை நடைபெறுகின்றன. இவையெல்லாம் வழமையான சம்பவங்களாகும்.
ஆனால், நாம் குறிப்பிடுபவையெல்லாம் அரசியல் காரணமாக திட்டமிட்ட முறையில் ஆயுதபாணிகளால் கடத்தப்படுவோரைப் பற்றியது.
எனவே, இதையும் அதையும் ஒன்றாக்கி குழப்பிக் கொண்டு அரசு தனது தவறை மறைப்பதற்கு இதனைப் பயன்படுத்தக் கூடாது" என்றும் கூறினார்.