அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது இறுதி ஆட்டத்தில் இந்தியா 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.
உலகச் சாம்பியன் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து இந்தியா வெற்றிவாகை சூடியிருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. 3 போட்டிகளைக் கொண்ட இறுதிச் சுற்றில் முதல் இறுதியாட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது இறுதியாட்டம் நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் ஆடியது. தொடக்க வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் உத்தப்பா நிதானமாக ஆடி இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். எனினும் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் உத்தப்பா ஆட்டமிழந்தார். அவர் கிளார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து வந்த காம்பீர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஆட வந்த யுவராஜ் சிங், டெண்டுல்கரோடு ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார்.
யுவராஜ் சிங் அதிரடியாக ஆடி மின்னல் வேகத்தில் 38 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் கப்டன் தோனி ஆட வந்தார். தோனியும் டெண்டுல்கரும் சிறப்பாக ஆடினர். இந்நிலையில் சதத்தை நெருங்கிய டெண்டுல்கர் 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ரோஹித்சர்மா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தோனி 36 ஓட்டங்களை எடுத்தார். இதனால் இந்திய அணியின் ஓட்டம் குவிக்கும் வேகம் தடைப்பட்டது. இறுதியில் இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்து அவுஸ்திரேலியா வெற்றிபெற 259 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பந்துவீச்சில் நதன் பிராக்கன்-3, மைக்கல் கிளார்க் -3, சைமன்ட்ஸ், ஸ்ருவேர்ட் கிளார்க், பிரட்லி தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பின்னர் ஆடத் தொடங்கிய அவுஸ்திரேலியா முதல் 3 விக்கெட்டுகளையும் ஆரம்பத்திலேயே இழந்தது. 32 ஓட்டங்களுக்குள் இந்த 3 விக்கெட்டும் வீழ்த்தப்பட்டதால் அவுஸ்திரேலிய அணி தடுமாறியது.
பின்னர் ஹைடன் மற்றும் சைமன்ஸ் சிறப்பாக ஆடினர். இந்த நிலையில் ஹைடன் 55 ஓட்டங்களில் ரன் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து சைமன்ஸ் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் அவுஸ்திரேலியா பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதன்பின் ஹோப்ஸ் மற்றும் ஹசி ஜோடி சேர்ந்து ஆடினர். இருவரும் அவுஸ்திரேலியாவை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர்.
அப்போது ஹசி 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டம் பரபரப்பான கட்டத்திற்குச் சென்றது. இறுதியில் அவுஸ்திரேலியா 49.4 ஓவர்களில் 249 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
64 ஓட்டம் எடுத்த ஹோப்ஸ் கடைசியில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் இந்தியா 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மூன்று போட்டிகளைக்கொண்ட இறுதிச் சுற்றில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றதன் மூலம் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே இந்தியா வீழ்த்தி சாதனை படைத்திருக்கின்றது.
ஆட்ட நாயகனாக இந்தியாவின் பிரவீன் குமாரும் ஆட்டத்தொடர் நாயகனாக அவுஸ்திரேலியாவின் நாதன் பிராக்கனும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்த முக்கோணத் தொடரில் மூன்றாவது அணியாக இலங்கை பங்குபற்றியதும் குறிப்பிடத்தக்கது.