டிட்டோகுகன்
சட்ட விரோதமான அனைத்து ஆயுதக் குழுக்களிடமிருந்தும் ஆயுதங்களை களைத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியும் நேர்மையுமானதுமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு கோரி சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பான "பவ்ரல்" தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை நிராகரித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியே பவ்ரல் அமைப்பு இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் காலப் பகுதியில் சட்டவிரோதமான அனைத்து ஆயுதக் குழுக்களிடமிருந்தும் ஆயுதங்களை களைய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் அரச மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான வாகனங்களை அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறும் அத்துடன், வாக்களிப்புகளின் போது மோசடிகள் நடைபெறும் வாக்குச் சாவடிகளின் வாக்குகளை செல்லுபடியற்றதாக்கி அந்த வாக்குச் சாவடிகளில் மீண்டும் வாக்கெடுப்புகளை நடத்த தேர்தல் ஆணையாளருக்குள்ள சட்ட ரீதியான அதிகாரத்தை செயற்படுத்த உத்தரவிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
தேர்தல்கள் ஆணையாளர் மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட 35 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் நடத்துவதற்கு இடையூறாக அம்மாவட்டத்தில் ஆயுதக் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
பவ்ரல் அமைப்பின் இந்த அடிப்படை உரிமை மனு நேற்று பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையில் சிராணி திலகவர்தன, ஜகத் பாலபட்டபெந்தி ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே விசாரணைக்கு ஏற்காமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
ஆயுதக் குழுக்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யுமாறு மனுதாரர் தரப்புக்கு ஆலோசனை வழங்கியுள்ள நீதியரசர்கள் குழாம், தேர்தலுக்கு ஆயுதக் குழுக்களால் தடங்கல் ஏற்படின் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்தி அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், தேர்தல் பிரசாரங்களுக்கு அரச ஸ்தாபனங்களின் வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பில் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்க முடியுமென உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களின் போது அளிக்கப்பட்ட வாக்குகளை செல்லுபடியற்றதாக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லையென்று சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதனையடுத்து இந்த மனு குறித்த விசாரணைகளை உயர் நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இருப்பினும் தேர்தல்களின் போது ஏதேனும் மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட விபரங்களுடன் பிறிதொரு மனுவை தாக்கல் செய்ய முடியுமென்றும் நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.