டிட்டோகுகன்
ஆசிரியர்களின் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை சாடியுள்ள பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களுக்கு நல்ல `விளாசல்' கொடுப்பதற்காக அவர்களின் விடயம் தம்மிடம் வருவதற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
எமது பாடசாலை நாட்களில் சுகவீனமென பொய்யான காரணத்தைக் கூறினால் எமக்கு 6 பிரம்படி தரப்படும்.
இப்போது சுகவீனமெனத் தெரிவிக்கும் ஆசிரியர்கள் என்முன் வந்தால் அவர்களுக்கு 6 நல்ல பிரம்படி கொடுப்பதற்காக நான் காத்திருக்கின்றேன் என்றும் பிரதம நீதியரசர் கூறியுள்ளார்.
கொழும்பு பிரதான நீதிவான் வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கையின் முதலாவது நுகர்வோர் நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசும் போதே சரத் என். சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
"நுகர்வோர் இன்று பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, நுகர்வோர் பாதுகாப்பு அவசியமானது.
1977 ஆம் ஆண்டு வரை அதிகாரத்துக்கு அடிமைப்பட்ட வர்த்தக முறையே இருந்து வந்தது. 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் வந்த பொருளாதார கொள்கையும் சூறையாடுதலாகவே உள்ளது. இவற்றை குறைக்கவும் நிர்வகிக்கவும் இந்த நீதிமன்றத்தின் மூலம் முடியும்.
2 ஆம் உலக யுத்தத்தின் போதே விலை கட்டுப்பாட்டுச் சட்டம் உலகுக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. ஏனெனில், யுத்தம் நிலவும் போது யுத்தச் செலவு அதிகமாக இருக்குமென்பதால் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். எனவே, பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விலை கட்டுப்பாட்டுச் சட்டமொன்று தேவை.
இதேநேரம், இலங்கை ரூபாவின் நாணயப் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகின்றது. 30 வருடங்களாக நிலவி வரும் யுத்தமே இதற்குக் காரணமாக இருக்கிறது. எனவே, நாட்டில் கூடிய விரைவில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த சமாதானத்தைக் கொண்டு வர நீதித்துறையினூடாக நான் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் அண்மையில் புதிய நீதிமன்ற தொகுதியொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இன்று (நேற்று) திறந்து வைக்கப்பட்ட இந்த (நுகர்வோர் ) நீதிமன்றத்தினால், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை பொருட்களின் விலைகளை குறைக்கப் போவதில்லை. எனினும், நுகர்வோர் தொடர்பாக அரசாங்கம் அனுதாபப்படுகிறது என்பதற்கானவொரு அடையாளமே இது.
ரூபாவின் நாணயப் பெறுமதியை உயர்த்த எமக்கு முடியாது. எனினும், நான் நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்திருக்கிறேன். பல இடங்களில் விசாலமான பயிர்ச் செய்கை நிலங்கள் வெறுமனே கிடக்கின்றன, இவற்றில் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டால் தன்னிறைவு காண முடியும்.
இது வளங்கள் மிக்க நாடு. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும்.
விலைக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னர் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்து இறக்குமதிகளை குறைக்க வேண்டும். அப்போது பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். அத்துடன் இறக்குமதி குறையும் போது ரூபாவின் நாணயப் பெறுமதி வீழ்ச்சியையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
இதேநேரம், தற்போது எமக்கு எண்ணெய்வளம் கிடைத்திருக்கிறது. இதில் களவுகள் எதுவுமில்லாமல் சரியாக உபயோகித்தால் முன்னேற்றம் காண முடியும் சூறையாடல்கள் நாணயப் பெறுமதி வீழ்ச்சி போன்றவற்றை நீதிமன்றத்தால் நிறுத்த முடியாது. எனினும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு அழுத்தம் கொடுத்து செயற்படவைக்க முடியும்.
சந்தையில் போட்டித் தன்மையை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் பொருட்களின் விலை குறையும். சமையல் எரிவாயு (காஸ்) விலை அதிகரிப்பினால் நகர்ப்புற மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம், சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலம் பொருட்களின் விலைகளை குறைத்து விட முடியாது.
முன்னரெல்லாம் நாம் பாடசாலைக்கு சமுகமளிக்காவிட்டால் ஆசிரியர்கள் எமக்கு அடி கொடுப்பர். ஆனால், இன்று சில ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் என்னிடம் வந்தால் மேற்குறித்தது போன்றே நான் அவர்களுக்கு தண்டனை கொடுப்பேன்" என்றும் தெரிவித்துள்ளார்.