* புது டில்லியில் லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் இராணுவ ரீதியான உறவு மிக உன்னதமான நிலையில் இருப்பதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியிலான பிணைப்புகளை மேலும், வலுப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு 6 நாள் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தற்போது இலங்கையும் இந்தியாவும் இராணுவ ரீதியில் சிறப்பான உறவுகளைப் பேணி வருகின்றன. நீண்டகாலமாக இருந்து வரும் இந்த உறவுகள் மேலும் தொடருமென எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்துக்கு வெளியே இராணுவத் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. அதன் பின்னர் நிருபர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இரு நாட்டு இராணுவ ரீதியான உறவுகள் சிறப்பாக இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகளிலும் பார்க்க இலங்கை இராணுவத்தின் கரங்கள் ஓங்கியிருக்கக் கூடியதை உறுதிப்படுத்த இந்தியா விரும்புவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். சிறுபான்மைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்திலான தீர்வுப் பொதியை இலங்கை அரசாங்கம் முன்வைக்கக் கூடியதற்கு ஏற்புடைய விதத்தில் இலங்கை இராணுவத்தினை வலுப்படுத்த இந்தியா விரும்புவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் புதுடில்லிக்கு வருகை தந்திருப்பதாக ஏ.என்.ஐ. செய்திகள் தெரிவித்தன.
இலங்கைக்கு நவீன ரக ஆயுதங்களை வழங்குவதற்கு இந்தியா தயக்கம் காட்டி வரும் நிலையில், இலங்கையானது சீனா, பாகிஸ்தானிடம் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக அதிகளவில் முனைப்புக்காட்டி வரும் நிலையில், இலங்கை இராணுவத் தளபதியின் இந்திய விஜயம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கப் போவதாக இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.