இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக நடைபெற்ற வீரர்கள் ஏலம், இந்திய மாநிலங்களவையில் மோதலை ஏற்படுத்தியது.
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பிசிசிஐ துணைத் தலைவரும் காங்கிரஸ் உறுப்பினருமான ராஜீவ் சுக்லாவும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அமர் சிங்கும் ஐ.பி.எல் ஏலத்தால் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.
அரசியல்வாதிகளின் கௌரவம் பொதுமக்களிடையே சீரழிந்து வருகிறது என எதையோ மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசினார் காங்கிரஸ் உறுப்பினர் ஜனார்த்தன் துவிவேதி. அவரது பேச்சை இடைமறித்து, கிரிக்கெட் வியாபாரமாகிவிட்டது மத்திய அரசு, இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது என ஐக்கிய ஜனதா தளத்தலைவர் சரத் யாதவ் கூறினார்.
அதற்குக் காரணமானவர்கள் இந்த அவையில்தான் அமர்ந்திருக்கிறார்கள் என ராஜிவ் சுக்லாவைக் குறிப்பிட்டு அமர்சிங் பேசினார். உடனடியாக எழுந்து அதற்கு பதிலடி கொடுத்தார் சுக்லா. இதனால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.