இந்திய வாடகைத் தாய்களைத் தேடிவரும் அமெரிக்கத் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளில் குழந்தை பெறமுடியாமல் உள்ள தம்பதிகளுக்கு அவர்களின் கருவை சுமந்து குழந்தை பெற்றுத்தரும் வாடகைத் தாய் முறை பல ஆண்டாக நடைமுறையில் உள்ளது.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் இம்முறை இந்தியாவில் அறிமுகமானதுடன் குஜராத் உட்பட்ட சில மாநிலங்களில் வாடகைத் தாய்களை தனியார் மருத்துவமனைகள் தேர்வு செய்கின்றன.
குழந்தையில்லா தம்பதிகளுக்கு அவர்கள் குழந்தையை பெற்றுத்தரும் பத்து மாதம் வரை, மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். அவர்களுக்கு போஷாக்கான உணவுகள் தரப்படும். குழந்தை பெற்று தந்ததும், அவர்களின் பணி முடிந்துவிடுகிறது. அவர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா வரை வழங்கப்படும்.
குழந்தையில்லா இந்திய தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுத்தருவதை விட, வெளிநாட்டு தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுத்தருவதில் தான் இவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. அதுபோல, அமெரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த குழந்தையில்லா தம்பதிகள், இந்திய வாடகைத்தாய் மூலம் தங்களின் குழந்தையை பெற்றுக்கொள்ளும் செலவு பலமடங்கு குறைகிறது. அமெரிக்காவில், வாடகைத்தாய் அமர்த்தினால் செலவு 35 இலட்சம் ரூபா. இந்தியாவில் 10 இலட்சம் ரூபா.
இதனால், அமெரிக்காவில் குழந்தையில்லா தம்பதிகள், அதிக அளவில் இந்தியாவில் உள்ள வாடகைத்தாய்களை தேடி வருகின்றனர். அமெரிக்க மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள், காப்புறுதி நிறுவனங்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்து தருகின்றன.
இணையம் மூலம் இந்தியாவில் உள்ள வாடகைத்தாயை தேர்வு செய்து, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். பத்து மாதம் சுமந்து, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று நாடு திரும்புகின்றனர்.