`எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்; அமைதியான முறையில் போராடி அதைப்பெறுவோம்' என்று ஸ்கொட்லாந்து பிரதமர் அலெக்ஸ் சால்மோன்ட் கூறியுள்ளார்.
பிரிட்டனின் கட்டுப்பாட்டில் ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவை உள்ளன. இந்த நாடுகளின் நாணயம், இராணுவம் உட்பட்ட முக்கிய முடிவுகளை பிரிட்டன் அரசு தான் எடுக்கிறது. சில அதிகாரங்கள் மட்டும் அளிக்கப்பட்டு, தனி பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. `எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்' என்று ஸ்கொட்லாந்து மக்கள் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளனர். சில ஆண்டாக இந்த கருத்து பரவலாக இருந்தாலும் ஸ்கொட்லாந்தில் உள்ள பல கட்சிகளும் பிரிட்டன் அரசுக்கு ஆதரவானவை என்பதால் எடுபடாமல் இருந்தது. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி வெற்றிபெற்றது. 129 இடங்களை கொண்ட பாராளுமன்றில் 47 இடங்களை பெற்றது. பெரும்பான்மை இல்லாத நிலையில், சிறுபான்மை அரசை அலெக்ஸ் சால்மோன்ட் அமைத்துள்ளார்.
பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்து, சுதந்திர நாடாக ஸ்கொட்லாந்து ஆக வேண்டும் என்று போராடி வரும் இந்தக் கட்சி, இப்போது ஆட்சியை பிடித்துள்ளதால், பிரிட்டன் அரசு கலக்கம் அடைந்துள்ளது. `ஸ்கொட்லாந்துக்கு சுதந்திரம் வேண்டுமா?' என்பது பற்றி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தும் வகையில் வெள்ளை அறிக்கையை பாராளுமன்றில் புதிய அரசு தாக்கல் செய்ய உள்ளது. ஸ்கொட்லாந்து தேசிய கட்சியை தவிர, எல்லா கட்சிகளும் இதற்கு எதிர்ப்பாக உள்ளன. அதனால், மக்களிடம் நேரடியாக வாக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. `வெள்ளை அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றில் தீர்மானம் கொண்டு வரப்படும்' என்றும் பிரதமர் சால்மோன்ட் கூறினார்.
இதுகுறித்து சால்மோன்ட் மேலும் கூறுகையில்;
`ஸ்கொட்லாந்து மக்கள் அமைதியை விரும்புபவர்கள்; தீவிரமாக போராடும் குணம் அவர்களுக்கு இல்லை. அதனால், அமைதியான முறையில் எங்கள் கோரிக்கைகளை, பிரிட்டன் அரசிடம் வைக்க உள்ளோம். அமைதியாக வலியுறுத்தியே நாங்கள் சுதந்திரத்தை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 2011 ஆம் ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் பிரசாரம் சுதந்திரம் பற்றியதாகத்தான் இருக்கும்' என்றார்.