* பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறையீடு
கடவூச்சீட்டு தொட்பாக கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்த இளைஞர் ஒருவரை வழக்கு விசாரணைக்காக கொழும்பில் சகல பதிவுகளுடனும் தங்கியிருந்த போதும் கொட்டாஞ்சேனைப் பொலிஸார் கைது செய்து தற்போது பூசா முகாமில் தடுத்து வைத்துள்ளதாக தாயார் மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப் பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார்.
ஊரெழு கிழக்கைச் சேர்ந்த ராஜசிங்கம் ஈஸ்வரன் (வயது 28) என்பவரே கொட்டாஞ்சேனை கைராஸ் லொட்ஜில் வைத்து கைது செய்யப்பட்டு 9 நாட்களுக்கு பிறகு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அத்துல என்ற கான்ஸ்டபிலினால் கைது செய்யப்பட்டு பின்னர் அவரை பூசா முகாமில் தடுத்து வைத்திருப்பதாகவும் தாயாரான ராஜசிங்கம் கமலாவதி முறையிட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனையில் தனது நண்பர் ஒருவரின் கடவுச்சீட்டை போட்டோ பிரதி செய்து எடுத்துக் கொண்டு வரும் போது கொட்டாஞ்சேனைப் பொலிஸார் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் வழக்கை முடித்துக் கொண்டு மத்திய கிழக்கு நாட்டுக்குச் செல்ல காத்திருந்ததாகவும் தனது வழக்கு தொடர்பான சகல விபரங்கள், ஆவணங்கள் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பொலிஸ் விசாரணை நடைபெறும் நீதிமன்றம் உட்பட அனைத்து விபரங்களையும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் விசாரணை அதிகாரிக்கு வழங்கிய போதும் அவர்கள் எதுவிதமான பதிலும் கூறாமல் காரணமின்றி தனது மகனை பூசாவில் தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
வெளிநாடு செல்வதற்காக தமிழ் முகவரான பெண் ஒவரிடம் கடவுச்சீட்டு, பணத்தை பறிகொடுத்துள்ள தனது மகனை விடுவித்துத் தருமாறு தாயாரான கமலாவதி பிரதி அமைச்சரை சந்தித்து துயரத்துடன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு இயக்குனர் நந்தன முனசிங்கவுடன் தொடர்பு கொண்ட பிரதியமைச்சர் ஈஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை விளக்கியுள்ளார்.
இதேவேளை, பூசா முகாமில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் கமலகண்ணன், கமலகண்ணன் கார்த்திகா, லாசாஸ் சாமுவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு இயக்குனர் பிரதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கடந்த மாதம் 14 ஆம் திகதி மாளிகாவத்தை கிண்ணியா லொட்ஜிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொழும்புக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு கடவத்தையில் கைவிடப்பட்ட இளைஞரான கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட சீனித்தம்பி சுபாஷனை கம்பஹா நீதிமன்றத்திலிருந்து அழைத்து வந்த பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் கடும் தாக்குதலுக்கும் சூட்டுக்காயங்களுக்கும் உள்ளான அவருக்கு மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்து தங்குவதற்கு இடமளித்து தற்போது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தான் மத்திய கிழக்கு நாட்டுக்கு போவதற்காக ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை சாய்ந்த மருதைச் சேர்ந்தமுகவருக்கு வழங்கியதாகவும் வெளிநாடு செல்வதற்காக கிண்ணியா லொட்ஜில் தங்கியிருந்த போது கஜன் என்பவருடன் தான் கடத்தப்பட்டதாகவும் தன்னை தாக்கி மின்சாரக்கம்பிகளால் சுட்டு இம்சித்தவர்கள் தமிழ், சிங்களம் இரண்டையும் சரளமாக பேசியதாகவும் பிரதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
தனது இரண்டு சகோதரிகளையும் தாயையும் சுனாமிக்குப் பலிகொடுத்ததில் ஏற்பட்ட விரக்தியிலேயே உதவிகள் எதுவுமே கிடைக்காத நிலையில் அரபு நாட்டுக்கு செல்வதற்கு பணம் செலுத்தியதாகவும் தெரிவித்த சுபாஷன், சுனாமியால் பாதிக்கப்பட்ட போதும் இதுவரை 45 ஆயிரம் ரூபா மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சகல வழிகளிலும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சுபாஷன் தனது மனைவி பரிமலர், தந்தை சீனித்தம்பியுடன் பாதுகாப்பாக புகையிரதத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரதி அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக இரகசிய பொலிஸாரிடமும் ஜனாதிபதி உட்பட பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சுபாஷனுக்கு ஏற்பட்ட அனுபவத்தை தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.