* சபையில் ஜோசப் மைக்கல் பெரேரா
பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மக்களுக்கு மேலும் சுமையைக் கொடுக்குமென எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளதுடன், சிறிய தொழிற்துறைகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மின் கட்டண அதிகரிப்புத் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பாக பேசுகின்ற நிலையில் அரசாங்கம் இதிலிருந்து நழுவப் பார்க்கின்றது. இது குறித்து பேசுகின்ற போது சபையில் அரச தரப்பைச் சேர்ந்தோர் எவரும் இருப்பதில்லை.
மின்கட்டண அதிகரிப்பானது பல்வேறு வகையில் தாக்கத்தைச் செலுத்தப் போகின்றது. சிறிய மற்றும் தொழில்துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உற்பத்திச் செலவை அதிகரித்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும்.
ஏற்கனவே மக்கள் பொருட்களின் விலை உயர்வினால் அல்லல்படுகின்ற நிலையில் இந்தக் கட்டண அதிகரிப்பு பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாக முடியப் போகின்றது.
அதேநேரம் உற்பத்திச் செலவு அதிகரித்தால் ஊழியர்களின் எண்ணிக்கை தொழில் துறையில் வரையறுக்கப்பட்ட மற்றுமொரு வகையிலும் மக்கள் பாதிக்கப்படுவர். இது எண்ணெய் சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்த கதையாகவே முடியப் போகிறது.
மின்சார சபைக்கு எரிபொருட்களுக்கான மானியம் நீக்கப்படுவதே இந்த கட்டண அதிகரிப்புக்குக் காரணமென கூறப்படுகின்றது. ஆனால், மிகின் எயாருக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் மானிய அடிப்படையில் எரிபொருளை வழங்குகின்றது.
1987 இல் எமது ஆட்சிக்காலத்தில் மதவழிபாட்டுத் தலங்கள் பாடசாலைகளுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்கினோம். அந்த மின் சாரவிளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு விட்டன.
சபையில் ஐ.தே.க.வே கேள்வியை எழுப்பி பதிலை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எமது கேள்விகளுக்கு பதிலளிப்பவர்கள் ஒருவரும் இன்று சபையில் இல்லை.
தற்போது தொழிற்துறைகள் மூடப்பட்டு வருகின்றன மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின் குறிப்பாக சிறிய தொழில் முயற்சிகள் உட்பட பல்வேறு தொழில் முயற்சிகள் பாதிக்கப்படும்.
சிறியளவிலான தொழில் முயற்சிகள் பாதிக்கப்பட்டால் பெருமளவிலானவர்கள் தொழில்களை இழக்கவேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, இந்த விடயம் மிக முக்கியமானது. வீட்டுப் பாவணையாளர்கள் 90 அலகுகளை விட ஒரு அலகுகூடுதலாக பயன்படுத்தினால் கூடுதலாக பாதிக்கப்படுவர்.
நீர்கொழும்பு பொஸ்கோ, கங்காராம தேவத்தை வசலிக்கா ஆகிய சமய அரச சார்பற்ற தொண்டு அமைப்புகள் தொழிற் பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இந்த மின் கட்டண அதிகரிப்பால் பாரிய சுமை அவர்களுக்கு ஏற்பட்டு அவற்றை மூட வேண்டிய நிலைமை ஏற்படப்போகின்றது.
கோப் அறிக்கையில் பெருமளவு ஊழல் மோசடிகள் மின்சார சபையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மோசடியில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது. எமது ஆட்சிக் காலத்தில் பெருமளவு பணத்தை மின்சாரசபை சேமித்திருந்தது தற்போது பணம் வீண்விரயம் செய்யப்படுகின்றது.
பால்மா, அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசியப் பொட்களின் விலையுயர்வால் மக்கள் அல்லல்படுகின்ற நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள். பொருட்களின் விலையுயர்வுக்கு யுத்தத்தை காரணம் காட்டுகின்றனர். இந்த அரசாங்கம் பெரிய அமைச்சரவையைக் கொண்டுள்ள அதேசமயம் எத்தனை பேர் ஜனாதிபதி ஆலோசகராகவுள்ளனர். இதுவே பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும்.
இது மக்கள் மீது தான் சுமையைச் செலுத்தும். மக்கள் வீதியில் இறங்க முடியாதளவுக்கு வலுவிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பியசீலி விஜயநாயக்க
ஜே.வி.பி.எம்.பி.பியசீலி விஜயநாயக்க பேசுகையில்;
மின்கட்டண அதிகரிப்புத் தொடர்பாக வர்த்தமாணி மூலம் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இதன் படி ஒரு குறிப்பிட்ட காலத்துக்கே மின்கட்டண அதிகரிப்பு ஏற்படாது.
மின் உற்பத்திக்கு மானியம் வழங்குவதாக கூறி ஒரு லீறறர் பெற்றோலுக்கு 9 ரூபா மேலதிகமாக அதிகரிப்பதாக முன்னர் அரசு தெரிவித்த நிலையில் அதற்கு தற்போது என்ன நடைபெற்றுள்ளது.
இதனை அறவிட்டு இந்தியன் ஒயில் கம்பனிக்கு வழங்கப்படுகின்றது.
வீட்டில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் இரவு முழுவதும் மின்சாரம் பாவிக்கப்பட்டு 90 அலகிலிருந்து 91 அலகாக உயர்ந்தால் இந்த கட்டண அதிகாரிப்புக்குட்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.