Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
உள்ளூராட்சி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
[06 - March - 2008] [Font Size - A - A - A]
* அரசு அறிவிப்பு

எம்.ஏ.எம். நிலாம்

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை நீதியானதும், நேர்மையானதுமாக நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முறைப்பாடும் செய்யப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

கிழக்கு மக்கள் ஜனநாயக ரீதியில் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரமான வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதன் ஆரம்ப நடவடிக்கையே இந்த உள்ளூராட்சித் தேர்தல் எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

தேர்தலை நீதியாக நடத்தி முடிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கும் பொருட்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியதாவது;

கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் மீட்டெடுத்த பின்னர் அங்கு இயல்பு வாழ்க்கை வழமை நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது. அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீண்ட தூரப் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. சகல கிராமங்களுக்கும் மின்சார வசதிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய ஆரோக்கியமான சூழலிலேயே மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. அரசாங்கம் இத்தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிப்பதில் உறுதிபூண்டுள்ளது. இன்றுவரையில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 29 முறைப்பாடுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அவை கூட சிறு சம்பவங்களாகவே காணப்படுகின்றன. அவற்றில் 14 முறைப்பாடுகள் தொடர்பில் சுமுகமான தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், குழுக்களும் சீரான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

எதிரணியினர் ஆயுதக் குழுவொன்று நடமாடுவதாக குற்றஞ்சுமத்தியுள்ளது. அப்படி எவரும் ஆயுதங்களுடன் நடமாடுவதாக இதுவரையில் முறைப்பாடுகள் எதுவுமே செய்யப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் கருத்துத் தெரிவிக்கையில்;

மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலை கண்காணிப்பதற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையில் பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகள், தேர்தல் அதிகாரிகள், வாக்குப் பெட்டிகள் போன்ற அனைத்துக்கும் போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு தினத்தில் எந்தவிதமான பிரச்சினைகளுமின்றி வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச்சென்று சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சூழலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுதக் குழுவினரின் நடமாட்டம் குறித்து பொலிஸ் தலைமையகத்துக்கு எந்தவிதமான முறைப்பாடுகளும் கிட்டவில்லை. அவ்வாறு நடப்பதாக தெரியவந்தால் அவர்கள் எந்த தரத்தினராயினும் பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டாது எனவும் குறிப்பிட்டார்.

* நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாதீர் தமிழ்க் கூட்டமைப்பு அழைப்பு

டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிர்ப்பந்தத்துக்கு அடிபணியாமல் மக்களை செயற்படுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டநீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான மாவை சேனாதிராஜா இந்த அழைப்பை விடுத்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

இந்த அவசரகாலச் சட்டமானது தமிழ் மக்களின் குரலை நசுக்கி அழித்தொழிக்க செயற்படுகிறதே தவிர இனப்பிரச்சினைக்கு முடிவு காண செயற்பட்டதில்லை . எனவே, தான் நாம் இதை ஒவ்வொரு முறையும் எதிர்த்து வருகிறோம்.

குண்டு வீச்சுகளால் யாழ்ப்பாணம், மன்னார் மக்கள் அதிர்ந்து கொண்டிருப்பதாக பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவே சுட்டிக்காட்டியிருக்கிறார். விமானக் குண்டு வீச்சுகள் உள்ளிட்ட தாக்குதல்களையே அவர் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். இவரது இந்த கருத்து ஒரு தீர்ப்பு போன்றது தான்.

அத்துடன் , இந்த குண்டுச் சத்தங்களால் யாழ்ப்பாணத்தில் வௌவால்களுக்குக் கூட வாழ முடியாது போயிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இதன் விளைவுகளை உணர்ந்தே அவர் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன். பிரதம நீதியரசர் குண்டு வீச்சுகளின் சத்தத்தைப் பற்றி மட்டுமே பேசியிருக்கிறார். எனினும் அதன் விளைவுகளையும் பற்றி அவர் பேச வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடுமென்ற அசட்டுத்தனமான எண்ணத்துடன் அரசாங்கம் கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் மக்களின் அபிமானத்தைப் பெற்ற எமது தமிழரசுக் கட்சி போட்டியிடவில்லை என்பதால் உள்ளூராட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற முடியுமென்ற நப்பாசையுடன் அரசாங்கம் அங்குள்ள ஆயுதக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

இதன்மூலம், இந்த அரசாங்கமும் இயக்கங்களும் எதிர்பார்ப்பது என்ன? அங்குள்ள எமது மக்களை இன ரீதியாக பிளவுப்படுத்துவதே அரசின் இந்த செயற்பாட்டின் நோக்கமாகும். அதற்கு எமது மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள்.

ஜனநாயகம் என்ற போர்வையில் இராணுவ அடக்கு முறையின் கீழ் இங்கு தேர்தலொன்றை நடத்தப் பார்க்கின்றனர்.

இதேநேரம், நாம் இனிமேலும் கிழக்கில் தேர்தலில் கலந்து கொள்ள மாட்டோமென்ற நினைப்பில் அரசாங்கமும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஆயுதக் குழுக்களும் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். எனினும், நாம் எமது உத்தியை மாற்றி எமது கிழக்கு மக்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராகச் செயற்படவுள்ளோம். எனவே, கிழக்கு மக்கள் நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்க்க வேண்டும். இதுவே, எமது செய்தியாக இருக்கிறது. மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும். காலம் மாறும் என்றார்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com