1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ண வெற்றிக்குப் பின் மகத்தான வெற்றியென்று அவுஸ்திரேலியாவில் கிண்ணத்தை வென்றிருப்பது குறித்து இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
முக்கோணத் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர், இந்த வெற்றி மகத்தானதென்றும், இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்த வீரர்கள் உறுதி கொண்டிருந்ததாகவும், அதனை நிறைவேற்றிக் காட்டியிருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதனிடையே சச்சின் டெண்டுல்கர் மனைவி அஞ்சலி இந்த வெற்றி குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நாடே இந்த வெற்றியை கொண்டாடுவதாகக் கூறியுள்ள அவர் தானும் அதனை கொண்டாடி மகிழ்வதாக தெரிவித்துள்ளார்.
91 ஓட்டங்களில் ஆட்டமிழந்த டெண்டுல்கர் சதம் அடித்திருந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகியிருக்குமென்று அவர் கூறியுள்ளார். எனினும், சச்சின் சதத்தை தவறவிட்டதை விட, இந்திய அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியான விடயம் என்று அவர் கூறியுள்ளார்.