முக்கோணத் தொடரில் அவுஸ்திரேலிய தரப்பில் சர்ச்சை மன்னராகத் திகழும் அன்றூ சைமண்ட்ஸ் மீண்டும் ஒரு பிரச்சினையில் சிக்கியிருக்கிறார்.
நேற்று முன்தினம் பிரிஸ்பேனில் நடந்த 2 ஆவது இறுதியாட்டத்தில் ஒரு ரசிகர் திடீரென நிர்வாணக் கோலமாக மைதானத்துக்குள் புகுந்து விட்டார். அவரைப்பிடிக்க பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்து ஓடி வந்தனர். களத்தில் ஆடிக் கொண்டிருந்த சைமண்ட்ஸை நோக்கி ஓடி வந்த அவரை, சைமண்ட்ஸ் தனது தோள் மூட்டினால் பலமாக இடித்துத் தள்ளினார். இதனால் கீழே விழுந்த அந்த ரசிகரை பொலிஸார் பிடித்துச் சென்றனர்.
ஐ.சி.சி. விதி 4.2 இன் கீழ் ஒரு வீரர், சக வீரர், நடுவர், போட்டி நடுவர், போட்டிக்கான அதிகாரிகள் மற்றும் ரசிகர்கள் ஆகியோரை உடல் ரீதியாகத் தாக்குவது தண்டனைக்குரியதாகும். இந்த நடத்தை விதியை சைமண்ட்ஸ் மீறியிருந்தாலும் போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அந்த ரசிகர் கேவலமாக நடந்து கொண்டதால் சைமண்ட்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று தெரிகிறது.
அதேசமயம் அந்த நிர்வாண ரசிகருக்கு 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அபராதமாக விதிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டது.