-ஜோதி வரதராஜா-
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நவீன விஞ்ஞான யுகத்தில் தொழில்நுட்பம் என்பது வியத்தகு வகையிலும் ஆச்சரியப்படும்படியும் வளர்ச்சியடைந்துள்ளது.
எங்கெல்லாம் தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்துள்ளதோ அங்கெல்லாம் மக்களின் வாழ்க்கைத்தரமும் பொருளாதார நிலையும் பெருமளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறான வளர்ச்சிக்குக் காரணமானவர்களையும் வளர்ச்சியடைந்தவர்களையும் எடுத்துப்பார்த்தால் உலக சனத்தொகையில் மிகச்சிலரே ஆவர். அதாவது, நூற்றுக்கு 20% சதவீதமான மக்களே அவ்வாறு வெற்றிபெற்றவர்கள்.
அப்படியாயின் மிகுதி 80% வீதமானவர்களின் நிலை என்ன? இவர்கள் வாழும் நாடுகளின் நிலை என்ன? சற்றே சிந்தித்துப் பார்த்தால் வறுமைக் கோட்டுக்குக் கீழே குறைவான பொருளாதாரத்துடனும் போசாக்கின்மையுடனும் குறைந்த கல்வியறிவுடனும் ஐஸ்வர்யமின்றி ஆரோக்கியமின்றி சீரில்லாத குடும்ப உறவு முறைகளுடன் துயரத்துடனும் போராட்டத்துடனும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் தான் இந்த 80% வீதமான உலக மக்கள்.
இந்த ஏற்றத்தாழ்விற்குக் காரணமென்ன? சாதனையாளர்களாக, வெற்றியாளர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட அந்த சிலருக்கு எப்படி இந்த வெற்றி கிடைத்தது. இந்த உண்மையை தான் நாம் விழிப்புணர்வுடன் தேடிப் பார்க்க வேண்டும். உண்மையான நிலை என்னவெனில் இந்தப் பிரபஞ்சத்தில் இறைவனுடைய இறையருள் என்பது சைத்தன்யம் என்கின்ற மகாசக்தியாக பூமிக்கு வருகிறது. அது ஐஸ்வர்யத்திற்கான அருளாக, ஆரோக்கியத்திற்கான அருளாக, குடும்ப ஷேமத்திற்கான அருளாக, கல்வியறிவிற்கான அருளாக, ஆன்மிகத்திற்கான அருளாக எங்கும் நிறைந்து காணப்படுகின்றது.
யார் யாருக்கெல்லாம் இந்த சைத்தன்ய நிலை மிக அதிகமாகக் கிடைக்கின்றதோ அவர்கள் தனக்கென ஒரு குறிக்கோளை அமைத்துக்கொண்டு அதற்காக அயராது முயற்சியும் செய்து இறையருளைப் பெற்று சாதனை படைக்கின்றார்கள். அத்துடன், கஷ்டங்களின்றி ஆனந்தத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்கின்றார்கள்.
இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், உயர்ந்த சைத்தன்ய நிலையே மனிதனை சிறந்தவனாக உருவாக்குகின்றது. இவ்வாறு இந்த சைத்தன்ய நிலையை மக்களிடையே உயர்வடையச் செய்து ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் ஜீவன் முக்தி நிலையை அடையச் செய்வதன்மூலம் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சிக்கு 2012 ஆம் ஆண்டிற்குள் மக்களை கொண்டு செல்வதற்காகவே இறை அவதாரம் எடுத்திருக்கிறார்கள் ஷ்ரீ ஷ்ரீ அம்மாவும் பகவானும்.
இவர்களால் நடாத்தப்படும் ஏகத்துவம் பல்கலைக்கழகம் ஒவ்வொரு மனிதனையும் மனிதத் தன்மையிலிருந்து தெய்வீகத் தன்மைக்கு அழைத்துச் செல்கிறது. இங்கு நடைபெறுகின்ற வகுப்புகளில் மனிதனுக்கும் இறைவனுக்குமான விட்டுப்போன தொடர்பு மீண்டும் ஏற்படுத்தப்படுகிறது.
அம்மா பகவானால் வழங்கப்படுகின்ற "தீட்சை" என்கின்ற உன்னத சக்தி மனிதனுக்குள் விழிப்புணர்வையும் ஞானத்தையும் பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களது சைத்தன்ய நிலையையும் உயர்வடையச் செய்கிறது. இவ்வாறு மாற்றமடைந்து உயர்ந்த சைத்தன்ய நிலையில் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் அம்மா பகவானின் அனுக்கிரகத்தால் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, எமது வாழ்க்கைத்தரத்தையும் பொருளாதாரத் தரத்தையும் நாமும் மாற்றமடையச் செய்ய வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டியது எமது சைத்தன்ய நிலையை உயர்த்திக் கொள்வது.
இன்று வெள்ளிக்கிழமை கருணைக் கடலான ஷ்ரீ ஷ்ரீ முக்தீஸ்வர அம்மா பகவானின் 59 ஆவது ஜென்ம தின வைபவம் இலங்கை வாழ் பக்தர்களால் மோதரை நாவலர் மணிமண்டபத்தில் மாலை 3 மணிக்கும் நாளை சனிக்கிழமை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் காலை 8 மணிக்கும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.
இவ்விழாவை சிறப்பிப்பதற்காக இந்தியாவின் ஏகத்துவ பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்துள்ள தாசர்களினால் "அனுக்கிரக தீட்சா" என்கின்ற மாபெரும் அனுக்கிரக நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளது.
பக்தர்கள் அனைவரும் வருகை தந்து அனுக்கிரக தீட்சையில் பங்குபற்றி ஷ்ரீ ஷ்ரீ அம்மா பகவானால் கருணை கூர்ந்து அருளப்படுகின்ற ஐஸ்வர்யத்திற்கான, ஆரோக்கியத்திற்கான, குடும்ப ஷேமத்திற்கான, தொழில், கல்வியறிவிற்கான அனுக்கிரகத்தை பெற்று வாழ்க்கையில் ஆனந்தமான வாழ்க்கையை பெற்றுய்யுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.