* கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலர் தெரிவிப்பு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் செயற்பட்டு வரும் (நிக்கோட்) வடக்கு கிழக்கு சமுதாய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 70 மில்லியன் ரூபா செலவில் கடந்த இரண்டு வருடங்களாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் மாணவர், ஆசிரியர்கள் , ஊடகத்துறையினர் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வந்த எச்.ஐ.வி. எயிட்ஸ் தடுப்புத் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய செயற்றிட்டத்தின் நிறைவு நிகழ்வு கடந்த புதன்கிழமை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் அமைச்சின் நுழைவாயிலில் நிறுவப்பட்ட எச்.ஐ.வி.எயிட்ஸ் தடுப்பு விளம்பரப் பலகையை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி என்.ஆர். ரஞ்சினி திரைநீக்கம் செய்து வைத்தார்.
அந்நிகழ்வில் நிக்கோட் திட்டப் பிரதிப் பணிப்பாளர் என்.புகேந்திரன் , கிழக்கு மாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராஜன் ஆகியோரும் பங்குபற்றினர். பின்னர் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அருள்குமரன் ஆரம்பவுரையாற்றினார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சினி பேசும்போது;
வடக்கு கிழக்கு மாகாணங்களில் எச்.ஐ.வி. எயிட்ஸ் பரவும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது என்ற காலகட்டத்தில் தான் எயிட்ஸ் விழிப்புணர்வுச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் இடம்பெயர்வு காணப்பட்டது.
அவ்வாறு இடம்பெயர்ந்தோரில் பலர் நலன்புரி முகாம்களில் தங்கியிருந்தனர். இன்னும் பலர் இந்தியாவுக்குச் சென்று அங்கும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர். அதனால், எயிட்ஸ் தொற்றக்கூடிய வாய்ப்பு வடக்கு, கிழக்கில் அதிகம் காணப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
நோய் வருவதற்கு முன்னர் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்குடன் தான் நிக்கோட்டின் நிதியுதவியுடன் கடந்த இரண்டு வருடங்களாக எயிட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாக வடக்கு, கிழக்கில் எச்.ஐ.வி- எயிட்ஸ் தொற்றுவது குறைவாகக் காணப்படுகின்றது என்று கூறினார்.
கடந்த இரு வருடங்களில் எச்.ஐ.வி- எயிட்ஸ் தடுப்புத் தொடர்பாக 400 விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ளதாகவும் செயலாளர் கூறினார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.தேவராஜன் பேசும்போது ;
இவ்விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர் மத்தியில் கட்டுரைப் போட்டி , சித்திரப் போட்டி ஆகியன நடத்தப்பட்டன. கர்ப்பிணிகள், இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்கள் மத்தியிலும் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன என்று குறிப்பிட்டார்.
புகைத்தல், மதுபாவனை கூடாது என்பது அனைவருக்கும் தெரிகின்றது. ஆனால், தெரிந்தும் அந்தத் தவறுகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். கற்றால் மாத்திரம் போதாது. பெற்ற கல்வி , கல்வி பெறுபவரின் பழக்க வழக்கங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பங்குபற்றினால் மாத்திரம் போதாது. பழக்கவழக்கங்களில் மாற்றக் கூடியதாக பங்குபற்றுபவர்கள் அதனைப் பயன்படுத்த வேண்டுமென்று டாக்டர் தேவராஜன் தெரிவித்தார்.
நிக்கோட் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் என்.புகேந்திரன் பேசும்போது;
அழிவிலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்றும் முகமாகவே எச்.ஐ.வி- எயிட்ஸ் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தை இரண்டு வருடங்களாக நடைமுறைப்படுத்துவதற்குரிய உரிய நிதியுதவியை நிக்கோட் வழங்கி வருகின்றது என்று கூறினார். விழிப்புணர்வுச் செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு நிக்கோட் 11 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 70 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைவிட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வேறு பல நலன்பேணும் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 252 மில்லியன் ரூபாவை நிக்கோட் செலவு செய்து வருகின்றது என்றும் பிரதிப் பணிப்பாளர் புகேந்திரன் தெரிவித்தார்.
போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எயிட்ஸ் தடுப்பு பிரசார அட்டைகளுடனான அப்பியாசக் கொப்பிகளும் மாணவர் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. விழிப்புணர்வு நாடகம் , நடனம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன. விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் மாகாண இணைப்பாளர் எஸ்.நமசிவாயமும் நிகழ்வில் கலந்து கொண்டார்.