வவுனியா சமயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்ட போது, கடத்திச் செல்லப்பட்டவர் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் விடுவிக்கப்பட்டது குறித்து வவுனியா தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று ஆட்டோக்களில் வந்த ஆயுதபாணிகள் சமயபுரம் பகுதியில் கொள்ளையிட முற்பட்டபோது, பிரதேச விழிப்புக்குழு மற்றும் பிரதேச மக்களால் இந்தக் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதையடுத்து கொள்ளையர் நடத்திய வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்ததுடன் கொள்ளையர்களால் தொப்பன் இராமசாமி (67 வயது) என்பவர் கடத்திச் செல்லப்பட்டார்.
கடத்தப்பட்டவரைக் கண்டு பிடிக்கவும் சம்பவம் குறித்தும் விசாரணை செய்யவும், கிராம மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நீதிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், கடத்தப்பட்டவர் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் தாண்டிக்குளம் பகுதியில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் நீதிபதிக்கு அறிவித்துள்ளார்.