* வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார்
இலங்கை தொடர்பாக எதனையும் சர்வதேச சமூகத்திற்கு மறைப்பதற்கு அரசாங்கம் தயாரில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
சர்வதேச சமூகத்திற்கு இலங்கை பற்றி எதனையும் மறைப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. ஐ.நா. உதவிச் செயலாளர் ஏஞ்சலினா கனேக்கும் இதனை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இராணுவ ரீதியிலேயே பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. இதனை சர்வதேச சமூகம் அவதானித்து வருவதையும் நாம் விளங்கி வைத்துள்ளோம். அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அடையவும் நாம் உறுதியாகவுள்ளோம்.
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை கூட்டத் தொடரில் மனித உரிமையிலுள்ள எமது பற்றுக் குறித்து சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளது.
சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கெதிராக மேற்கொள்ளப்படும் போலியான பிரசாரங்கள் தற்போது முறியடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சர்வதேசம் பயங்கரவாதத்திற்கெதிரான போருக்கு இலங்கைக்கு ஆதரவளிக்கிறது என்றார்.