* 13 ஆவது திருத்தம் ராஜிவின் சூழ்ச்சியென்கிறார் லால்காந்த
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிற்கு உரியதல்ல. அது முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் சூழ்ச்சியென ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற அவசரகால சட்டப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
1948 இல் நாம் சுதந்திரம் பெற்ற போதும் 1987 இல் இலங்கையை இந்தியா ஆக்கிரமித்தது. அப்போதிருந்த இடதுசாரிகளும் இந்தியாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தினர்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்தியாவிடம் மண்டியிட்டபோது ஐ.தே.க.வின் சர்வதேச தோழர்கள் மௌனம் காத்தனர். இதனாலேயே இலங்கை- இந்தியா உடன்படிக்கை அமுலுக்கு வந்தது. இதனால் வடமராட்சி மீதான இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
இந்தியா அன்று இலங்கையை ஆக்கிரமித்திருக்காவிட்டால் புலிப் பயங்கரவாதிகளை 1987 இலேயே இராணுவ ரீதியாக தோற்கடித்திருக்கலாம்.
சம்பூரில் அனல் மின்சார நிலையம் அமைக்க இந்தியா நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்தியாவின் விசேட தலையீடுகள் பலவழிகள் மூலம் இலங்கையில் தொடருகிறது.
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவும் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கிறது. 13 ஆவது திருத்தம் ஜே.ஆர்.க்கு உரியதல்ல. அது ராஜீவ் காந்தியின் சூழ்ச்சியாகும். வரதராஜப் பெருமாள் போன்ற கீழ்ப்படியும் புலியை வடகிழக்குக்கு நியமிக்க இந்தியா விரும்புகிறது.
தலையாட்டும் பொம்மைகளே வட, கிழக்கில் இருக்க வேண்டுமென இந்தியா விரும்புகிறது. இந்தியாவின் விருப்பத்திற்கு தலையாட்ட இங்கு சில பொம்மைகள் தயாராகவுள்ளன. இந்தியாவின் நோக்கம் சில அடிபணியும் புலிகளை வளர்த்தெடுப்பதேயாகும்.தமிழ் மக்களை இந்தியா கருணையோடு பார்க்கிறது என்ற மாயையில் சிலர் உள்ளனர். இது தவறானது. தேசியப் பாதுகாப்பு என்பது புலிகளுக்கெதிரான யுத்தத்தை தீவிரப்படுத்துவது மாத்திரமல்ல இலங்கைக்கு எதிரான சக்திகளையும் தோற்கடிப்பதற்கேயாகும். இதிலிருந்து அரசாங்கம் பாதை மாறுமேயானால் அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி. வாக்களிக்க வேண்டியேற்படும்.