கண்டியில் நடத்த உத்தேசிக்கப்பட்ட 15 ஆவது சார்க் மாநாட்டை பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் நடத்துவது குறித்து அர சாங்கம் ஆராய்ந்து வருவதாக அறியவருகிறது.
இதனை வெளிவிவகார அமைச்சுச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகண தினக்குரலுக்கு உறுதிப்படுத்தினார்.
15 ஆவது சார்க் மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கண்டியில் நடைபெறுமெனவும், இதில் சார்க் நாட்டு தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வரெனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அத்துடன், சார்க் மாநாட்டுக்காக 250 கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டு, கண்டி நகரில் அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவிருந்தன.
இந்நிலையிலேயே பாதுகாப்பு காரணங்களுக்காக சார்க் மாநாட்டை கொழும்புக்கு இடமாற்றுவது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹோகண சார்க் மாநாட்டை கொழும்பில் நடத்துவது குறித்து ஆராய்வதாகவும், எனினும் இதுவரை இறுதித் தீர்மான மெதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.