* ஐ.தே.க.விசனம்
-எம்.ஏ.எம்.நிலாம்-
அரசியலமைப்பில் கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஷரத்துக்களுக்கு முரணாக அரசாங்கம் செயற்பட்டு வருவதால் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் 40 வீதத்துக்கும் அதிகமான பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதில் இன்னமும் இழுபறிநிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் அர்த்தமற்ற கல்விக் கொள்கையால் நாட்டின் கல்வித் திட்டம் முற்று முழுதாக சீர்குலைக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி விசனம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
இவ்வாண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை முடிவடைவதற்கு இன்னும் ஒருமாதம் உள்ளது. ஆனால், முதலாம் ஆண்டுக்கான பிள்ளைகளை பாடசாலைக்குச் சேர்க்கும் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாட்டிலுள்ள 40 வீதமான பாடசாலைகளில் இன்னமும் முதலாமாண்டை ஆரம்பிக்க முடியாத நிலைக்கு அதிபர்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.
கல்வி அமைச்சின் சுற்றுநிருபமும், கல்விக் கொள்கையும் பல்வேறு முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. ஒரு பிரதேசத்தில் வாழும் குடும்பம் தமது பிள்ளையை பிரதேச பாடசாலைக்குச் சேர்ப்பதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது. தந்தை பிறிதொரு பிரதேசத்தில் தொழில்புரிந்தால் அந்த விண்ணப்பம் மேற்படி சுற்று நிருபம் காரணமாக நிராகரிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சிடமோ, அமைச்சரிடமோ உறுதியான நிலைப்பாடு காணப்படவில்லை. எதனையும் தீர்மானமாகக் கூறும் நிலைப்பாட்டில் அமைச்சர் காணப்படவில்லை. கல்வித் திட்டம் தொடர்பில் அரசியலமைப்பு வசதிகளின் ஷரத்துகளைப் புறக்கணிக்கும் விதத்தில் கல்வித் திணைக்களத்தின் சுற்று நிருபம் காணப்படுகிறது. இதன் காரணமாக ஏழைக்குடும்பங்களின் பிள்ளைகளது கல்வி பாதிக்கப்படுகிறது.
அரசாங்கம் எதிர்காலச் சந்ததியின் கண்களை குருடாக்கும் முயற்சியில் இயங்கிக்கொண்டிருக்கிறது. நீண்டகாலமாகத் தொடரும் இப்பிரச்சினைக்கு அரசால் தீர்வு காணமுடியவில்லை. இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
நாட்டிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டவண்ணமே காணப்படுகின்றன. வருடத்தில் ஒரு தவணைகூட பல்கலைக்கழங்கள் சீராக இயங்குவதில்லை. பல்கலைக்கழகங்களுக்குள் கட்சி அரசியல் புகுந்துள்ளது. ஜே.வி.பி.யின் அரசியல் ஆதிக்கம் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரசோச்சுகின்றது. இதனால் இளம் மாணவர்களின் கல்விமுன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.
ஜே.வி.பி.யினர் இளம் தலைமுறையினரை தவறான பாதையிலிட்டுச் செல்லும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் இதனைக் கண்டும் காணாததுபோல் செயற்படுகின்றது. அரசு இதனைத் தடுத்துநிறுத்த தவறினால் பின்விளைவுகள் பாரதூரமானவையாக அமையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.