* ஜெயலலிதா கண்டனம்
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதாக கடுமையாகக் கண்டித்துள்ள அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதா இதனைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை கடற்படையின் நடவடிக்கையினால் தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. தி.மு.க.ஆட்சியில் இந்தியா வசம் இருந்த கச்சதீவு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசால் இலங்கை நாட்டிற்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் உரிமை சர்வதேச அளவில் பறிபோய் விட்டது.
நான் முதலமைச்சராக இருந்தபோது, கச்ச தீவை `நிரந்தர குத்தகைக்கு' எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தியுள்ளேன். ஆனால், மத்திய அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.
சர்வதேச பிரச்சினை, அண்டை மாநிலங்களுடனான பிரச்சினை, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஆகியவை குறித்து மத்திய அரசிடம் பல முறை எடுத்துச்சொல்லியும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைப் பங்கு போட்டுக் கொள்ளும் ஆர்வத்தில் பாதி கூட தமிழக மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதில் காட்டவில்லை.