தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களின் படுகொலைகளுக்கான பொறுப்பை இந்த அரசு தட்டிக் கழிக்க முடியாதெனவும் இதற்கு அரசே பதில் சொல்ல வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான கி.சிவநேசன் நேற்று பிற்பகல் வன்னியில் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டது தொடர்பாக விடுத்த செய்தியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் நேற்று நண்பகல் மாங்குளத்திற்கு அருகில் ஏ-9 நெடுஞ்சாலையில் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி எமக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த மன வேதனையையும் தந்திருக்கிறது. இப்படுகொலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.
சிவநேசன் ஏ-9 பாதை மூடப்பட்டிருப்பதால் யாழ்ப்பாணம் கரவெட்டியிலிருந்த தனது மனைவி, பிள்ளைகளை மல்லாவியில் தங்க வைத்திருந்தார். யாழ்ப்பாணத்திலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்கள் இருந்துள்ளன.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் பங்குகொண்டு எதிர்த்து வாக்களித்துவிட்டு நேற்றுக்காலை மல்லாவிக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் இக்கொடிய சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சென்ற ஆண்டு நடுப்பகுதியிலும் இதே இடத்தில் கிளைமோர் குண்டு வெடித்தபோது அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியிருந்தார்.
இச் சம்பவம் திட்டமிட்டு குறிவைத்துத் தாக்கியழிக்கும் திறன்வாய்ந்த இலங்கை இராணுவப் பிரிவான ஆழ ஊடுருவும் குழுவினராலேயே செய்யப்பட்டிருப்பதாக நம்பவேண்டியுள்ளது. இதையொத்த பல சம்பவங்கள் வன்னிப் பிரதேசத்தில் முன்னரும் இடம்பெற்றிருந்தமையை சுட்டிக்காட்ட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பிலும் நடராஜா ரவிராஜ் கொழும்பிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு, சிவமகாராசா வேட்பாளர்களாயிருந்த விக்னேஸ்வரன், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் பலர் வடக்கு கிழக்கில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டவுள்ளோம்.
தமிழ் இனத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் கொலைசெய்யப்படுவது மட்டுமல்லாமல், காணாமல் போவதுடன், மனித உரிமை ஆணையகத்தில் சரணடைவதும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.
எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகிவருவதையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றத் தடைகள் ஏற்படுத்தப்படுவதையும் பாராளுமன்றத்திலும் சபாநாயகரிடமும் பலமுறை முறையிட்டும் பயனற்றதாகிவிட்டது. இவ்வாறு தொடர்ந்து எமது உறுப்பினர்கள்கொலைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டுவருவதன் மூலம் தமிழ் இனத்தின் உரிமைக்காக விடுதலைக்காக குரல் கொடுப்பதை, போராடுவதை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சிவநேசன் எம்.பி. தமிழ் இன விடுதலைக்காகவும் சமூக அடக்குமுறைக்குள்ளான மக்களின் விடிவுக்காகவும் கூட்டுறவுத் துறையின் முன்னேற்றத்திற்காகவும் மிகவும் துடிப்புடன் அயராது தன் இளம் பராயம் முதல் உழைத்த ஒரு உத்தமராக விளங்கியவர். மாற்றாரையும் ஈர்க்கும் பேச்சாற்றலும் அர்ப்பணிப்பு மனப்பாங்கும் தியாக சிந்தனையும் நிறைந்த அறிவாற்றல் மிக்க ஒரு தலைவனாக எம் மத்தியில் திகழ்ந்தவர்.
இத்தகைய படுகொலைக்கான பொறுப்பை அரசு தட்டிக்கழிக்க முடியாது. பதில் சொல்லியே ஆகவேண்டுமென வற்புறுத்துகின்றோம்.
சிவநேசன் எம்.பி.யின் இழப்பு எவ்வகையிலும் ஈடுசெய்ய முடியாததாகும். அன்னாரினால் கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பற்ற தியாகம் ஒருபோதும் வீண்போகாது. தமிழ்த் தேசத்தின் விடுதலைக்கே வித்தாகுமென்பதில் ஐயமில்லையென்றும் தெரிவித்துள்ளனர்.