* கப்டன் பொண்டிங் கூறுகிறார்
அவுஸ்திரேலிய வீரர்களுக்கு போதிய ஓய்வு அவசியமானதென்று கப்டன் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடந்த முக்கோண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
இதன்பின் அவுஸ்திரேலிய அணிக் கப்டன் ரிக்கி பொண்டிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது;
இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டித் தொடரிலும் , டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரிலும் நாங்கள் ஒரு சில வீரர்களைத் தான் மாற்றினோம். இது எங்களுடைய வழக்கத்துக்கு மாறானது. கடந்த சில வருடங்களாக நாங்கள் 5 அல்லது 6 வீரர்களை மாற்றியிருக்கிறோம். இதன்மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
தற்போது வீரர்கள் அதிகம் மாற்றம் செய்யப்படாததால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் நீண்டகாலமாக போட்டியிலிருந்து விலகியிருக்க முடியாத நிலை நிலவுகிறது. கடந்த ஆண்டில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் 2 இறுதிப் போட்டியிலும் தோல்வி கண்டோம். டெஸ்ட் , ஒரு நாள் ஆகிய இரண்டு போட்டியிலும் வீரர்கள் ஆடுவதால் வீரர்களுக்கு அதிகம் ஓய்வளிக்கப்பட வேண்டும். அப்போது தான் அவர்கள் இறுதிப் போட்டியில் புத்துணர்ச்சியுடன் செயற்பட முடியும்.
மூத்த வீரர்கள் ஓய்வு பெறும் போது நாங்கள் புது வீரர்களைக் கொண்டு வருவது வழக்கமானது தான். வீரரின் வயது அவரது ஆட்ட போர்மை திரும்ப அளிக்க உதவும் என்பது உறுதியில்லை. திறமை தான் வீரர்கள் போர்முக்கு வர உதவியாக இருக்கும். எங்களது மூத்த வீரர்கள் பலரும் இன்னும் அனைத்து திறமைகளுடன் உள்ளனர்.
இந்திய இளம் வீரர் இஷாந்த் சர்மா இந்தப் பயணத்தில் தன்னை நல்லபடியாக நிலை உயர்த்தியிருக்கிறார். அவரைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பல்வேறு கட்டங்களில் அவர் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பெர்த் டெஸ்டில் கடைசி நாளில் அவர் வீசிய பந்துவீச்சு, நான் டெஸ்ட் போட்டியில் சந்தித்த மிகச் சிறந்த பந்துவீச்சுகள் சிலவற்றில் ஒன்றாகும்.
இந்திய அணி எப்பொழுதும் சிறந்த இளம் வீரர்களை உருவாக்கக்கூடியது தான். ஆனால், அந்த வீரர்கள் வரும் காலங்களில் எப்படித் தங்கள் திறமைகளை மேற்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்பது தான் ஆர்வமானதாகும். ஹர்பஜன்சிங் சர்ச்சையால் நானும் சில அவுஸ்திரேலிய வீரர்களும் விமர்சனத்துக்குள்ளானோம். பல விடயங்கள் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. நான் எந்தவித பிரச்சினையிலும் ஈடுபடவில்லை. ஹர்பஜன் விவகாரம் மோசமாகப் போய்விட்டது. அந்த விடயத்தை வித்தியாசமாகவும், சிறப்பாகவும் நான் கையாள முடியுமென்று நினைக்கவில்லை.
ஹர்பஜன் சர்ச்சையால் அவுஸ்திரேலிய அணியின் ஆட்டம் பாதிக்கவில்லை. ஹர்பஜன்சிங் சிறப்பாக ஆடினார். அவர் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். எங்கள் அணியில் சைமண்ட்ஸ், ஹைடன் ஆகியோர் நன்றாக ஆடினார்கள். நாங்களும் நன்றாக ஆடியதாக நினைக்கிறோம். ஹர்பஜன்சிங்குக்கு கடினமான பயணம். கடைசியில் அவர் நிம்மதியடைந்திருப்பாரென்றும் தெரிவித்தார்.