அமெரிக்காவின் லூசியானா மாநில ஆளுநராகப் பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளி அமெரிக்கர் பாபி ஜிந்தால் அங்கு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாபி ஜிந்தால் கொண்டுவந்துள்ள சட்டங்கள் லூசியானாவின் நிலைமையையே தலைகீழாக மாற்றியிருப்பதுடன், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை திகைக்க வைத்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபி ஜிந்தா அமெரிக்காவின் லூசியானா மாநில ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதவிக்கு வந்த ஆறே வாரத்தில் அவர் அற்புத மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். அமெரிக்காவில், ஆளுநர் என அழைக்கப்படும் பதவி, முதல்வர் பதவியைப் போன்றது. ஜிந்தால் கொண்டுவர உள்ள புதிய சட்டப்படி, மாகாண சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும், தேர்வு செய்யப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தங்களது சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும். எட்டு இலட்சம் ரூபாவுக்கு மேல் கடன் பெற்றிருந்தால், எதற்காக, எவ்வளவு பெற்றார் என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும். நீதிபதிகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு.
அது மட்டுமல்ல, சபை உறுப்பினர்கள் உட்பட அரசு பதவிகளில் உள்ள எவரும் அரசின் நிதியில் செயற்படுத்தப்படும் பணிகளுக்கு ஒப்பந்தம் எடுக்கக்கூடாது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தச் சட்டங்களை கொண்டுவந்துள்ளார் ஜிந்தா. இது மட்டுமல்ல, சபை உறுப்பினர்கள், அதிகாரிகளின் ஆடம்பரச் செலவுகளுக்கும் பலத்த அடி கொடுத்துள்ளார்.
இந்த அதிரடிக் கட்டுப்பாடுகள் லூசியானாவை புரட்டிப்போட்டுள்ளது. புரட்சிகரமான இத்திட்டங்களால், அமெரிக்காவிலேயே பெரிதும் பின்னிலையில் உள்ள லூசியானா மாநிலம் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `நியூயோர்க்கில் இருப்பவர்களிடம், லூசியானாவில் கூடுதல் முதலீடு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கூடுதல் ஒதுக்கீடு கேட்டால், `யாருக்கு உதவ வேண்டும்? யார் மூலம் நிறைவேற்ற வேண்டும்? யாரை பணம் சென்றடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?' என்று தான் கேள்வி வருகிறது. இந்தப் போக்கு மாற வேண்டும். செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிறது' என்கிறார் ஜிந்தால். இந்த நடவடிக்கைகளால் ஜிந்தால் மீது பொது மக்களின் நம்பிக்கையும் ஆதரவும் பெருகி வருகிறது.