மலேசியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் வர்ணப் பூச்சை வீசியுள்ளார்.
மலேசியாவின் தலைமை தேர்தல் அதிகாரி வீட்டின் மீது மர்ம நபர் ஒருவர் வர்ணப்பூச்சை வீசி வியாழக்கிழமை தாக்குதல் நடத்த முற்பட்டார்.
நாடு முழுவதும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவரை அச்சுறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய பொதுத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேர்தல் நியாயமாகவும் அமைதியாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் அப்துல் ரஷித் அப்துல் ரெஹ்மான் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் அதிகாரியின் இந்நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், கடந்த சில நாட்களாகவே அவரது அலுவலகத்திற்கு தொலைபேசி செய்து அவரை மிரட்டி வந்தனர்.
இந்நிலையில், கையடக்கத் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் அவர் அச்சுறுத்தப்பட்டார். இந்த மிரட்டலை பொருட்படுத்தாத அப்துல் ரஷித் தொடர்ந்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த சிலர், அவரது வீட்டிற்கு வியாழனன்று மர்மநபரை அனுப்பி, வீடு முழுக்க சிவப்பு வர்ண பெயின்டை தெளிக்கச் செய்தனர்.
அந்த இடத்திலிருந்து, சிவப்பு பெயின்ட் வீசப்பட்ட காலி கேன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தலைமைத் தேர்தல் அதிகாரி அப்துல் ரஷித் அப்துல் ரெஹ்மான், எதற்கும் அடிபணியாது, எவ்வித அச்சமுமின்றி தனது கடமையை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.