*வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர்
கல்வி உலகம் கணிதத்தில் சிறந்து விளங்கினால் ஏனைய கலைகள் யாவற்றிலும் இலகுவில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற சிந்தனையில், கல்வி மேம்பாட்டுக்காக தனது சேவைக்காலத்தில், சேவையாற்றியவர் நாகராசா உலகநாதன். அவர் இன்று இளைப்பாறுவது, கல்வியுலகிற்குப் பெரும் இழப்பாகும். இவ்வாறு வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் வே.தி. செல்வரட்ணம் தெரிவித்தார்.
யாழ். கல்வி வலயத்தில் கணித பாடத்திற்கான உதவிக் கல்விப்பணிப்பாளராக சேவையாற்றி ஓய்வுபெறும் நாகராசா உலகநாதனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை யாழ். கல்வி வலய கணித ஆசிரியர் கழகம் வலயக்கல்விப்பணிமனை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்த பிரிவுபசார விழாவில் உரையாற்றும் போதே யாழ். கல்வி வலயப் பணிப்பாளரும், மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளருமான வே.தி. செல்வரட்ணம் தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு யாழ்ப்பாண மத்திய கல்லூரி ஆசிரியர் சி. சந்திரகுமார் தலைமைதாங்கினார்.
கல்விப்பணிப்பாளர் வே.தி. செல்வரட்ணம் தொடர்ந்து உரையாற்றுகையில் ஓய்வுபெறும் உலகநாதனிடம் அமைதி நிரம்பிய அறிவு இக்கணிதவியலாளரின் சிறப்பம்சமாகும். வலயக்கல்வியலுவலகப் பெறுபேறுகளில் காரணகர்த்தாக்களில் ஒருவராகவே சேவையில் இருந்துள்ளார். தன்னடக்கமும் நம்பிக்கையும், உடைய அவரிடமிருந்து கற்க வேண்டியவை அதிகமுள்ளது. அவர் ஓய்வுபெற்றாலும் கல்வியுலகுக்கு அவர் சேவையாற்ற வேண்டும் என்றார்.
நல்லூர் கோட்டக் கல்வியதிகாரி என். குணசேகரம் உரையாற்றுகையில், உலகநாதன் தன்னை நாடிவருபவர்களுக்கு உதவுபவராகவே சேவையாற்றியவர். அவரது தொண்டுள்ளம் கல்வியுலகிற்கு பெரும் வரப்பிரசாதமாகும். கீதையின் வாக்கியப்படி தொண்டு செய்வாய் உயர்வடைவாய் என்பதாகவே அவரது பணி அமைந்திருந்தது" என்றார்.
தலைமையுரையாற்றிய சி. சந்திரகுமார் தமதுரையில் உலகநாதன் ஓர் ஆசிரியராக இருந்து பல பதவிகளைப் பெற்று உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்ந்தவர். யாரிடத்திலும் பகைமையுணர்வு கொள்ளாதவர். எப்போதும் தனக்கு அடக்கமான மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டவர். எந்தப் பதவியானாலும் அதை நேர்மையாக செய்து பாராட்டப்பட்டவர். கணிதபாட அடைவுமட்டம் உயர்வதற்கு அவரது உழைப்பே மூலதனமாகும். அவர் ஓய்வுபெற்றாலும் அவரிடமுள்ள திறமை, சாதுரியம், அறிவு மேலாண்மை இனி வரும் காலத்திலும் கல்வியுலகிற்குக் கிடைக்க வேண்டும். என்றார்.
யாழ். கல்விவலய ஆசிரிய ஆலோசகர் நா. மகாநாதன் உரையாற்றுகையில், உலகநாதன் உதவிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றினாலும் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஒரு தந்தையைப் போல வழிகாட்டியாக இருந்தவர். அவர் ஓய்வுபெறுவது என்னைப் பொறுத்தவரையில் கல்வியுலகிற்கு இழப்பாகும் என்றார்.
வைபவத்தில், நன்றி தெரிவித்து உரையாற்றிய விழா நாயகர் நாகராசா உலகநாதன் இன்றைக்கு எனக்கு விழாவெடுத்து கௌரவிக்கும் அனைவரையும் போற்றுவதோடு நில்லாமல் என்னை ஆளாக்கிய என் ஆசிரியர்களுக்கு நான் என்றென்றும் தலைவணங்குகின்றேன் என்றார். வைபவத்தில் பலரும் உரையாற்றினர் விழாவுக்கு முன்னதாக உலகநாதன் தம்பதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.