விடுதலைப் புலிகளுக்கு தயாரிக்கப்படுவதாக கருதப்பட்ட படகொன்றை கேரளாவில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த படகை தமிழ்நாடு மற்றும் கேரளப் பொலிஸார் இணைந்து கடந்தபுதன்கிழமை கொச்சியில் கைப்பற்றியுள்ளனர்.
இப்படகானது 30 மில்லியன் பெறுமதியுடையதென மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது விடுதலைப் புலிகளுக்காக தயாரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
72 அடி நீளமான இப்படகானது இதன் கட்டுமானம் முடியும் தறுவாயில் கொச்சினுக்கு அண்மையாக முனாம்பாம்பத்திலுள்ள கப்பல் கட்டுமான தளத்தில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். இவர் வடக்கு பகுதி நகரான கொச்சிக்கடைக்கு அண்மையாகவுள்ள பெய்ப்பூரைச் சேர்ந்த இஸ்மாயில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த படகின் கட்டுமான தளத்தினை குத்தகைக்கு எடுத்திருந்த மற்றுமொரு நபரொருவரையும் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இதன்போது அவர் இப்படகினை தயாரிப்பதற்கு ஐந்து மாதத்துக்கு முன்னர் தான் 1.2 மில்லியன் ரூபாவினை முற்பணமாக பெற்றதாக தெரிவித்துள்ளார்.
இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விபரங்களை வெளியிட முடியாதென இதற்கு பொறுப்பான இன்ஸ்பெக்டர் ஜெனரலின் பிரத்தியேக செயலாளர் என்.சி.அஜந்தன் தெரிவித்தார்.
கடந்த வாரம் திருச்சிராப்பள்ளியில் வைத்து பொலிஸார் இருவரைக் கைது செய்திருந்த நிலையில் இவர்கள் கேரளாவில் விடுதலைப் புலிகளுக்காக படகொன்று நிர்மாணிக்கப்படுவதாக வழங்கிய தகவலையடுத்தே இப்படகு கைப்பற்றப்பட்டுள்ளது.