கடற்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்றை 26 நாடுகளுடன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடற்பிராந்தியப் பாதுகாப்பு அதிகரிப்பு தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
உலகளாவிய ரீதியில் தற்பொழுது கடல்சார் நடவடிக்கைகளுக்கு தீவிரவாதத்தால் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் அத்தீவிரவாத அமைப்புகள் தற்பொழுது பொருளாதார ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்துமளவிற்கு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
இவ்விடயம் தொடர்பில் புதுடில்லியில் நடைபெறும் இந்து சமுத்திரக் கடற்படை மாநாட்டில் சாசனமொன்று மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
அதன்படி இந்து சமுத்திர கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் கடற்கொள்ளை, மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.