குருவிற்ற சிறைச்சாலையில் சிறைக்காவலர்களால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டு மரணமான சுனில் பெரேரா என்பவரின் மனைவிக்கு ஐந்து இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்குவதற்கு அரச தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது.
மரணமான சுனில் பெரேராவின் மனைவி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து அரச தரப்பு சட்டத்தரணி இந்த முடிவை நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.
2007 ஜூன் 28 ஆம் திகதி இங்குள்ள பாடசாலை ஒன்றில் குண்டுப் புரளியை தொலைபேசி மூலம் ஏற்படுத்தியதாக சுனில் பெரேரா கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் குருவிற்ற சிறைச்சாலையில் வைக்கப்பட்டார்.
இவரை இவரின் மனைவி சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டபோது இருவர் இவரைத் தாங்கிப் பிடித்தவாறு நடக்கமுடியாத நிலையில் அவர் அங்கு காணப்பட்டார்.
பின்னர் அவர் மிக மோசமான நிலையில் இருந்து மரணமடைந்துள்ளார்.
2007 ஜூலை 7 ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸார் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் சுனில் பெரேரா மீது எதுவித குற்றச்சாட்டும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை அந்த வழக்கில் இருந்து நீதிவான் விடுதலை செய்திருந்தார்.
இவ்வாறு சுனில் பெரேராவின் மனைவி தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தனது கணவனை சட்டரீதியற்ற முறையில் கைது செய்ததாகவும் தடுத்து வைத்ததாகவும் சித்திரவதை செய்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிறைச்சாலை திணைக்களம், நீதியமைச்சு என்பன மனுதாரரான பெண்ணுக்கு நட்டஈடு வழங்குவதற்கு ஒப்புக் கொள்வதாக அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் நீதியரசர்களான என்.ஜி.அமரதுங்க மற்றும் அன்றூ சோமவன்ச முன்னிலையில் இந்த மனு பரிசிலிக்கப்பட்டது.