* ஐ.நா. ஏற்பாடு; நோர்வே அரசாங்கம் நிதியுதவி
இலங்கை உட்பட உலக நாடுகளின் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவுவதற்காக உயர்மட்ட மத்தியஸ்தர் குழுவொன்றை ஐ.நா. அமைத்திருக்கிறது.
இந்த மத்தியஸ்தர் குழுவில் சர்வதேசத்தில் முன்னணியிலுள்ள நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதனை ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் பி.லின் பாஸ்கோ அறிவித்திருக்கிறார்.
இந்த மத்திஸ்தர் குழுவானது ஐ.நா.வின் அரசியல் விவகாரத் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு வலுவூட்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளுக்கு உதவியளித்தல் மூலம் மோதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இக்குழுவினர் அரசியல் விவகாரத் திணைக்களத்துக்கு உதவியளிப்பார்கள். யுத்த நிறுத்தம், நீதித்துறை மாற்றங்கள், அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்ற உலகின் முன்னணி நிபுணர்கள் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பாஸ்கோ கூறியுள்ளார்.
அண்மைய வருடங்களில் மத்தியஸ்த உதவிக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. விசேடமாக அதிகாரப் பங்கீடு தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இக்குழுவினரால் உதவியளிக்க முடியுமென அவர் கூறியுள்ளார்.
இக்குழுவின் நடவடிக்கைகளுக்கு முதல் வருடத்திற்குத் தேவையான செலவினத்துக்கு நோர்வே அரசாங்கமே நிதியுதவியை நன்கொடையாக வழங்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.