எம்.ஏ.எம்.நிலாம்
பொறுப்பு வாய்ந்த ஊடக கலாசாரத்தை தோற்றுவிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் தேசிய ஊடக கொள்கையொன்றை உருவாக்கும் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இப்புதிய கொள்கை கொண்டுவரப்படுவதன் மூலம் ஊடகத்துறை மீதோ, ஊடகவியலாளர் மீதோ கட்டுப்பாடுகள், தணிக்கைகளை அரசு மேற்கொள்வதாகக் கருதிவிடக்கூடாது எனவும் அமைச்சர் யாப்பா சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் அநுர யாப்பா மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அமைச்சர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
"பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இலங்கையில் ஊடக சுதந்திரம் காத்திரமாகப் பேணப்பட்டு வருகின்றது. ஊடகத்துறைக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பூரண சுதந்திரம் இருக்கும் நாடாகவே எமது நாடு காணப்படுகின்றது.
இங்குள்ள பெரும்பாலான ஊடகங்கள் கூடுதலாக அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்பவையாகவே காணப்படுகின்றன.
அதையிட்டு அரசு கவலைப்படவில்லை. விமர்சிக்கும் உரிமை ஊடகத்துறைக்கு தாராளமாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில ஊடகங்கள் தமக்கிருக்கும் சுதந்திரத்தையும் , உரிமையையும் தவறாகப் பயன்படுத்த முனைகின்றன. இது ஜனநாயகப் பாரம்பரியத்துக்கு விரோதமானதாகும். எனவே, சர்வதேச ஊடகக் கோட்பாடுகளுக்கமைவாக அரசாங்கம் தேசிய ஊடகக் கொள்கையொன்றை வகுப்பதற்கு முடிவு செய்துள்ளது. இந்தத் தேசியக் கொள்கையை வகுப்பதில் ஏற்கனவே, பெரும் பகுதி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆரம்பத்திட்ட யோசனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நேர்மையானதும் பொறுப்பு வாய்ந்ததுமான ஊடக கலாசாரமொன்றை நாட்டில் தோற்றுவிப்பதே இதன் பிரதான நோக்கமாகும். இத்தேசியக் கொள்கையின் ஊடாக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதோ, ஊடக சுதந்திரத்தை நசுக்குவதோ அரசின் நோக்கமாக இருக்காது.
தற்போது நாட்டில் பூரண ஊடக சுதந்திரம் காணப்படுகிறது. இதனை மேலும், வலுப்படுத்தி பலம் வாய்ந்ததொரு ஊடகக் கலாசாரத்தை தோற்றுவிப்பதே அரசின் நோக்கமாகும்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முக்கியமான உறுதிப்பாடுகளில் ஒன்றான ஆரோக்கியமான ஊடகக் கலாசாரத்தை தோற்றுவிக்கும் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டே இந்த தேசிய ஊடகக் கொள்கை தயாரிக்கப்படுகின்றது" என்று அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.
இதேசமயம் சமீபகாலமாக ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்டுவரும் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு அரசாங்கம் நியாயமான தீர்வெதனையும் காணவில்லையே என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த அமைச்சர் அநுர யாப்பா கூறியதாவது;
ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல், தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. கடந்த காலத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணை அறிக்கைகள் கிடைத்ததும் நீதியான நடவடிக்கை எடுக்க ஒரு போதும் தயக்கம் காட்டமாட்டாது.
அமைச்சர் மேர்வின் சில்வா மீதான விசாரணைக்கு என்ன நடந்தது எனக் கேட்டபோது பதிலளித்த அமைச்சர்; சுதந்திரக் கட்சி நியமித்த குழுவின் விசாரணைகள் முடிவடையும் தறுவாயில் உள்ளன. முதற்கட்ட அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதனை ஆராய்ந்த பின்னரே எதுவும் கூறமுடியுமெனக் கூறினார். ஆனால், அரசாங்கம் தவறிழைத்த எவரையும் பாதுகாக்க முற்படாதென அமைச்சர் யாப்பா உறுதியளித்தார்.
அரசாங்கம் எதனையும் மூடி மறைத்து காலம் கடத்துவதாக எண்ண வேண்டாமெனவும் அமைச்சர் யாப்பா கேட்டுக் கொண்டார்.