வன்னியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் ஆழஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.கி.சிவநேசனின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை மல்லாவி பகுதியில் நடைபெறவுள்ளது.
இறுதிக் கிரியைகளிலும் வன்னியில் நடைபெற்று வரும் அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 எம்.பி.க்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை வன்னிக்குச் சென்றுள்ளனர்.
சிவநேசன் எம்.பி.யின் பூதவுடல் நேற்று முன்தினமிரவு மாங்குளம் ஆஸ்பத்திரியிலிருந்து துணுக்காய் மல்லாவியிலுள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
வியாழக்கிழமை இரவு முதல் அவரது பூதவுடலுக்கு பெருமளவு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மல்லாவியிலும் கிளிநொச்சி மற்றும் பகுதிகளிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டும் ஒலிபெருக்கிகள் மூலம் சோக கீதங்கள் இசைக்கப்பட்டும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
கொழும்பிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், அரியநேத்திரன், எஸ்.பத்மநாதன், ரி.கனகசபை, எஸ். ஜெயானந்தமூர்த்தி, பத்மினி சிதம்பரநாதன், எஸ். கஜேந்திரன், சிவநாதன் கிஷோர் மற்றும் ஆர்.ஏ.இமாம் ஆகியோர் நேற்றுக் காலை ஓமந்தை சோதனை நிலையமூடாக வன்னிக்குச் சென்றனர்.
இவர்களுடன் சிவநேசன் எம்.பி.யின் மூத்த புதல்வனும் கொழும்பிலிருந்து வன்னிக்குச் சென்றார்.
கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரும் நேற்று முற்பகல் மல்லாவிக்குச் சென்று சிவநேசன் எம்.பி.யின் பூதவுடலுக்கு தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
சிவநேசன் எம்.பி.யின் பூதவுடல் இன்று காலை முதல் வன்னியின் அனைத்துப் பகுதிகளுக்கும் மக்களின் அஞ்சலிக்காக ஊர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு நாளை நண்பகல் மல்லாவியிலுள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்படும்.
நாளை மாலை மல்லாவியில் இறுதிக் கிரியைகளும் இறுதி அஞ்சலிக் கூட்டமும் நடைபெறவுள்ளது.