தென் ஆபிரிக்க அணியுடன் சென்னையில் நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில், காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் வேகப்பந்து வீச்சாளர் சகீர்கான் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.
தென் ஆபிரிக்க - இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மார்ச் 26 ஆம் திகதி தொடங்குகிறது. அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய சகீர்கான், சிட்னி டெஸ்டுக்கு முன்பாக இடது காலில் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக இந்தியா திரும்பினார். அவர் இப்போது தென் ஆபிரிக்காவின் ஜொகனஸ்பேர்கில் உள்ள விளையாட்டு மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதால், முதல் டெஸ்டில் விளையாட மாட்டாரென கிரிக்கெட் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் ஆபிரிக்க அணியுடன் முதல் டெஸ்டில் மோதவுள்ள இந்திய வீரர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடப்பதாகவிருந்தது. இந்நிலையில், தேர்வுக்குழுக் கூட்டம் மார்ச் 17 ஆம் திகதி பெங்களூரில் நடக்குமென்று கிரிக்கெட் சபை நேற்று முன்தினம் திடீரென அறிவித்தது.
தியோதர் கிண்ணப் போட்டியில் விளையாடும் வீரர்களின் திறமையைப் பரிசீலிக்கும் வகையில், அணித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு முன்பாக, வீரர்களுக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்படுகிறது.
டிராவிட், கங்குலி, லக்ஷ்மன், ஆர்.பி.சிங், வி.ஆர்.வி.சிங், பங்கஜ் சிங், கும்பிளே ஆகியோருக்கு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமி வளாகத்தில் ஞாயிறு வரை உடல் தகுதிச் சோதனை நடத்தப்படுகிறது.
முதல் டெஸ்ட் சென்னையிலும் (மார்ச் 26-30), இரண்டாவது டெஸ்ட் அகமதாபாத்திலும் (ஏப்.3-7), 3 ஆவது டெஸ்ட் கான்பூரிலும் (ஏப்.11-15) நடக்கவுள்ளன. தென் ஆபிரிக்க அணி மார்ச் 21 ஆம் திகதி சென்னை வருகிறது.