* ஹர்பஜன் கூறுகிறார்
அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து விளையாடிய 3 மாதமும் தனக்கு மிகவும் கடினமான காலமாக இருந்ததாக ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை யார் மறந்தாலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கால் மட்டும் மறக்க முடியாது. ஏனெனில், இந்தத் தொடரில் நிறையப் பிரச்சினைகளை சந்தித்தவர் அவர் தான். அங்கிருந்து இந்தியா புறப்படும் முன் அளித்த பேட்டியில் கூறியதாவது;
கடந்த 3 மாத காலமாக அவுஸ்திரேலியாவில் பல விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டேன். இந்த 3 மாதமும் எனக்கு மிகவும் கடினமான காலமாக அமைந்தது. கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி, ஒரு மனிதனாக இங்கு நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொண்டேன்.
என்னை வெறுப்பேற்ற அவுஸ்திரேலிய ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பினார்கள். ஆனால், இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களின் இத்தகைய செய்கை அதிகரிக்க அதிகரிக்க நான் மேன் மேலும் சிறப்பாக செயல்பட்டேன். களத்தில் எனது நடத்தை பற்றி அவுஸ்திரேலிய பத்திரிகைகளும் அவுஸ்திரேலிய வீரர்களும் விமர்சித்தபோது, எனக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படவில்லை. ஏனெனில், நான் நட்பு ஏற் படுத்திக் கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வரவில்லை. எனவே இங்கு சாதாரணமாக விளையாடி விட்டு போக முடியாது.
அவுஸ்திரேலிய வீரர் ஹைடன் (ஹர்பஜன் சிங் வெறுக்கத்தக்க வீரர் என்று கூறினார்) என்னை வெளிப்படையாக விமர்சித்தார். அவரை அந்த மாதிரி சொல்ல எது தூண்டியது என்பது தெரியவில்லை. அவர் என்னை விடவும் கிரிக்கெட்டை விடவும் தன்னை பெரிய மனிதராக நினைத்துக் கொள்கிறார். நானும் வெளிப்படையாக எதுவும் சொல்லியிருக்க முடியும். ஆனால், அதை நான் விரும்பவில்லை. களத்தில் அவருக்கு பதிலளித்திருக்கிறேன் என்றார்.