* அட்டனில் நோர்வே தூதுவர்
இலங்கையில் வாழுகின்ற இந்திய வம்சாவளித் தமிழ் சமூக முன்னேற்றத்துக்காக நோர்வே அரசாங்கம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமென இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஈடோரா ஹட்ரீம் தெரிவித்தார்.
அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசியபோதே இதனை அவர் தெரிவித்தார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் செயற்படும் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கடந்தவருடம் பயிற்சிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் சீருடைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், பிரதியமைச்சர்களான எம்.எஸ். செல்லச்சாமி, எஸ். ஜெகதீஸ்வரன், மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன், தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் செயலாளர் ஆர். யோகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நோர்வே தூதுவர் பேசுகையில் கூறியதாவது;
"இலங்கையில் வாழுகின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் நலன்கருதி நோர்வே அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவிகளில் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனம் முக்கியமானது. இன்றைய யுகத்தில் தொழிற்பயிற்சி என்பது முக்கியமானதாகும். தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக்கொள்கின்றவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. தொழிற் பயிற்சியைப் பெற்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறலாம். பணம் சம்பாதிக்கலாம். இவ்வாறான பயனை இந்தத் தொழிற்பயிற்சி நிறுவனத்திலும் இளைஞர், யுவதிகளாலும் பெற்றுக்கொள்ள முடியும்.
நோர்வே அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இந்த நிறுவனத்தை சமூக நலன்கருதி பயன்படுத்துகின்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த நிறுவனத்துக்கான பயிற்சி வளவாளர்களை தந்துதவிய இந்திய அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த நிறுவனத்தை மேலும் பலப்படுத்துகிறேன். இந்த நாட்டின் இன்றைய சூழ்நிலைக்கு மத்தியில் அட்டனுக்கு வந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.