* `புதுடில்லியின் ஒத்துழைப்பை மறந்து விட முடியாது'
இந்தியாவை விமர்சிப்பதன் மூலம் ஜே.வி.பி.தவறிழைப்பதாக தெரிவித்த ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ, இந்தியாவுடன் இராணுவத் தொடர்பு உள்ளிட்ட சகல உறவுகளும் மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
`தினக்குரலுக்கு' நேற்று சனிக்கிழமை இதனைத் தெரிவித்த அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமெனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குத் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் வாய்ப்புக்கிட்டியுள்ளது. அரசாங்கம் கிழக்கு மாகாணத்தைப் புலிகளிடமிருந்து விடுவித்த பின்னர் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் மட்டு. உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தமது பிரதேசங்களை மேலும் அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு மாவட்ட மக்களுக்குக் கிட்டும். நாளை திங்கட்கிழமை அவர்கள் தீர்க்கமான தீர்மானம் மேற்கொள்வரென எதிர்பார்க்கிறேன்.
காலையில் வாக்களிப்பு நிலையம் சென்று தமது ஜனநாயக உரிமையை உறுதிசெய்யுமாறும் கோருகிறேன். தேர்தல் வன்முறை மிகக் குறைந்திருப்பது ஏனைய பிரதேசங்களுக்கு சிறந்த முன்மாதிரியாகும்.
மேலும் தமிழ் எம்.பி.க்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கிறேன். கடந்த ஆட்சிக் காலங்களில் பல தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனினும், சகல படுகொலைகளும் நிறுத்தப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு அவர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
சர்வதேச அழுத்தம் எதற்கும் உட்பட்டு நாம் செயற்படவில்லை. மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். சில சக்திகள் எமக்கெதிராக போலிப்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனை முறியடித்தே அரசாங்கம் தீரும்.
மேலும் இந்தியாவுடன் மிக உன்னத உறவு நிலவுகிறது. இராணுவ உதவி உள்ளிட்ட பலவழிகளில் அவர்களின் உதவி அமைந்துள்ளது. முப்படையினருக்கான பயிற்சியும் இதில் அடங்கும். அரசியல், பொருளாதார உறவு ரீதியாகக்கூட, நாங்கள் மிகவுயர் மட்டத்தில் உள்ளோம்.
இந்தியாவை ஜே.வி.பி.விமர்சிக்கின்றமையானது அந்த உறவில் சிறு பாதிப்பைக்கூட ஏற்படுத்தாது. இந்தியா எமது அயல்நாடு. எமக்கு அவர்களின் ஒத்துழைப்பவசியம் என்பதை மறந்து விடலாகாது.
1987 இல் இந்தியா இலங்கை வந்து முக்கிய பங்காற்றிய சமயம், ஜே.வி.பி.உள்ளிட்ட பலதரப்பினரால் இந்தியா வெளியேற நேர்ந்தமை துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவை விமர்சிப்பதன் மூலம் ஜே.வி.பி. தவறிழைக்கிறது.
ஜே.வி.பி.க்கு தனி அரசியல் கொள்கை இருக்கலாம். ஆனால் அதனைவிட எமது நாட்டு நலனும், வெளியுறவுக் கொள்கையும் பிரதானமானது. இதனை எம்மால் எவ்வகையிலும் புறக்கணிக்க முடியாது. இதில் உறுதியாகவுள்ளோம். விட்டுக்கொடுப்புக்கு இடமேயில்லை.
இதேசமயம், வட கிழக்குத் தமிழ் மக்களும் ஏனைய பிரதேசத்தினர் அனுபவிக்கும் உரிமையினையும் சலுகையினையும் அனுபவிக்கவும், நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி சகல சமூகங்களும் ஐக்கியமாக வாழவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், இதற்கு தமிழ், முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பைக் கோருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.