* ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுசென்று அஞ்சலி
வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. மாமனிதர் கி. சிவநேசனின் பூதவுடலுக்கு நேற்று சனிக்கிழமை வன்னியில் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கனகராயன்குளம் மன்னகுளம் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணியினரின் கிளைமோர் தாக்குதலில் சிவநேசன் எம்.பி.யும் அவரது வாகனச் சாரதியும் கொல்லப்பட்டனர்.
சிவநேசன் எம்.பி.யின் பூதவுடல் மல்லாவியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு நேற்றுக் காலை வன்னியின் சகல பகுதிகளுக்கும் விசேட ஊர்தியொன்றின் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
நேற்றுக் காலை முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் இவரது பூதவுடல் சென்றபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு தங்கள் இறுதி அஞ்சலியை கண்ணீர்மல்க செலுத்தினர்.
இதன் போது பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலிக் கூட்டங்களும் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் இந்தக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றினர். இரவது பூதவுடல் தாங்கிய ஊர்தி செல்லுமிடமெங்கும் வீதிகளின் இரு மருங்கிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பூத்தூவி தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
இவரது மறைவையொட்டி வன்னியின் சகல பகுதிகளிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டும் வாழை, தோரணங்கள் கட்டப்பட்டும் முக்கிய சந்திகளில் ஒலிபெருக்கிகள் மூலம் சோககீதங்கள் இசைக்கப்பட்டும் வருகின்றன.
நேற்றிரவு இவரது பூதவுடல் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது. இன்று நண்பகல் மீண்டும் மல்லாவிக்கு எடுத்துச் செல்லப்பட்டும் இவரது பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு மாலை 4 மணியளவில் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடைபெற்று இறுதிக் கிரியைகள் நடைபெறும்.